செய்திகள்
கோப்புப் படம்

சீன பள்ளியில் நடந்த கொடூரம் - 8 குழந்தைகள் குத்திக் கொலை

Published On 2019-09-03 10:35 GMT   |   Update On 2019-09-03 10:35 GMT
சீனாவில் மர்மநபர் ஒருவர் 8 பள்ளிக் குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங்:

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் உள்ளது என்ஷி கவுண்டி. இப்பகுதியில் உள்ள பையாங்பிங் பகுதியில் சாயோங்பாக் போ பள்ளி உள்ளது. ஆண்டு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், காலை 8 மணியளவில் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு வந்த ஒரு நபர் திடீரென குழந்தைகளை கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார். குழந்தைகள் அலறியடித்து ஓட ஆரம்பித்துள்ளனர். அவர் கத்தியால் குத்தியதில் 8 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்த காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தது.

விசாரணையில் அவர் கடந்த மே மாதம் தான் சிறையில் இருந்து விடுதலை ஆனதும், தனது காதலியின் கண்களை இயந்திர கருவியால் துளையிட முயன்ற குற்றத்திற்காக 8 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபகாலமாக சீனாவில் இது போன்று பள்ளிக் குழந்தைகளுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என பொதுமக்களும், நெட்டிசன்களும் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News