செய்திகள்
இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் - இம்ரான்கான்
இரட்டை குடியுரிமை பெற்றுள்ள வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றபின் இம்ரான்கான் முதன் முறையாக அமெரிக்கா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். பாகிஸ்தான் திரும்பிய அவர் மந்திரி சபை கூட்டத்தை நடத்தினார்.
அதில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இரட்டை குடியுரிமை உள்ளவர்களுக்கும் வாக்குரிமை வழங்கி அவர்களையும் தேர்தல்களில் போட்டியிட அனுமதி அளிப்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதன் மூலம் அவர்களும் அரசியலில் ஈடுபடும் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் உதவியால் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் என இம்ரான்கான் கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். அதை தொடர்ந்து இரட்டை குடியுரிமை பெற்றுள்ள வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த தகவலை பிரதமரின் உதவியாளர் பிர்தவுஸ் ஆசிக் அவான் தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது அதை நடைமுறைப்படுத்த பிரதமர் இம்ரான்கான் அதிக அதிகாரம் படைத்த ஒரு கமிட்டி அமைத்துள்ளார். அதில் அமைச்சக அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
வெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவது குறித்து அமைச்சக அதிகாரிகளுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் இம்ரான்கான் வழி காட்டுதல் நெறி முறைகளை வழங்கியுள்ளார் என்றார்.