செய்திகள்

வன்முறைக்கு இடையே தேர்தலில் வாக்களித்த ஆப்கானிஸ்தானியர்களுக்கு இந்தியா பாராட்டு

Published On 2018-10-21 22:04 GMT   |   Update On 2018-10-21 22:04 GMT
வன்முறைக்கு இடையே நடைபெற்ற தேர்தலில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த ஆப்கானிஸ்தானியர்களுக்கு இந்தியா பாராட்டுகளை தெரிவித்துள்ளது. #AfghanistanElection
புதுடெல்லி:

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தற்போது பாராளுமன்ற தேர்தல் நடத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
 
தலிபான் பயங்கரவாதிகளுடன் இணைந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பும் அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று இரண்டாம் நாள் வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், கிழக்கு நங்கர்கார் மாகாணத்தில் சாலையோரம் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்து 6 குழந்தைகள் உள்பட 11 பேர் இறந்தனர்.

இந்நிலையில், வன்முறைக்கு இடையே நடந்த தேர்தலில் வாக்குச்சாவடியில் வாக்களித்த ஆப்கானிஸ்தானியர்களுக்கு இந்தியா பாராட்டுகளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் தேர்தல் நடைபெறும் வேளையில் வன்முறை சம்பவங்கள் தலைதூக்கின.

ஆனாலும், பெண்கள் உள்பட பொதுமக்கள் பலரும் தைரியமாக வீடுகளை விட்டு வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையான வாக்குகளை அளித்துள்ளனர். அவர்களுக்கு இந்தியா தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவுவதற்கும், வளர்ச்சி அடைவதற்கும் தேவையான உதவிகளை இந்தியா நிச்சயம் செய்யும் என தெரிவித்துள்ளது. #AfghanistanElection
Tags:    

Similar News