செய்திகள்

ஒரே நாளில் 21 பாதுகாப்பு படையினரை கொன்று தலிபான் பயங்கரவாதிகள் வெறிச்செயல்

Published On 2018-09-10 07:49 GMT   |   Update On 2018-09-10 07:49 GMT
ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று மாலை வரை தலிபான் பயங்கரவாதிகளுடனான சண்டையில் 21 பாதுகாப்பு படையினர் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Afghanistan #Taliban
காபூல்:

ஆப்கானிஸ்தானில் போட்டி அரசை நடத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள், மேலும் பல்வேறு பகுதிகளை கைப்பற்ற பல்வேறு இடங்களில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினரும், அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.

தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரும், அமெரிக்கா உள்ளிட்ட அரசுக்கு ஆதரவான கூட்டுப்படைகளும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை நிலைகுலையச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் குன்டூஷ் மாகாணத்தில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று நள்ளிரவு தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை சற்றும் எதிர்ப்பாராத பாதுகாப்பு படையினர், சற்றே சுதாரித்துக் கொண்டு எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். நேற்று நள்ளிரவு துவங்கி இன்று காலை வரை நடைபெற்ற இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஜவ்ஜான் மாகாணத்தில் உள்ள காம்யாப் மாவட்டத்தில் போலீசாருக்கும், தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலை கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்ததாக காவல்துறை உயர் அதிகாரி பக்கீர் முகமது ஜவ்ஜானி தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதலால் 21 பாதுகாப்பு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். #Afghanistan #Taliban
Tags:    

Similar News