செய்திகள்

பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் பொதுமக்களை சிறைப்பிடித்த பயங்கரவாதி சுட்டுக்கொலை

Published On 2018-03-23 14:43 GMT   |   Update On 2018-03-23 14:43 GMT
தெற்கு பிரான்சில் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி மூன்று நபர்களை கொன்ற பயங்கரவாதியை போலீசார் சுட்டு வீழ்த்தினர். #Franceattack
பாரிஸ்:

பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள ட்ரேபெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் இன்று புகுந்த பயங்கரவாதி, அங்குள்ள ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடித்தான். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து, பிணைக் கைதிகளை காப்பாற்ற முயன்றனர். அப்போது, அந்த நபர் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தினான். அத்துடன், ஆத்திரமடைந்த அவன் பொதுமக்களையும் சுட்டுள்ளான். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

நீண்ட நேரம் நீடித்த இந்த சண்டையில் பயங்கரவாதியை போலீசார் சுட்டுக்கொன்றனர். பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் சூப்பர் மார்க்கெட் ஊழியர் மற்றும் ஒரு வாடிக்கையாளர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மொராக்கோ நாட்டைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சூப்பர் மார்க்கெட்டினுள் வாடிக்கையாளர்களை பிடித்து வைத்திருந்தபோது, தான் ஐ.எஸ். பயங்கரவாத இயக்க ஆதரவாளர் என்றும்,  பாரிஸ் தாக்குதல் (2015) வழக்கில் முக்கிய குற்றவாளியான சலாஹ் அப்தஸ்லாவை விடுவிக்க வேண்டும் என்றும் அவன் கூறியதாக தெரிகிறது.

சூப்பர் மார்கெட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக, கார்கஸ்சன் பகுதியில் டிரைவரை சுட்டுக் கொன்றுவிட்டு காரை கடத்தி வந்ததாகவும், வழியில் ஒரு போலீஸ்காரரை சுட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #Franceattack #tamilnews
Tags:    

Similar News