செய்திகள்

வட, தென் கொரியா-அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை

Published On 2018-03-23 02:05 GMT   |   Update On 2018-03-23 02:05 GMT
பின்லாந்து நாட்டில் இரு கொரியா நாடுகளின் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஹெல்சிங்கி:

தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து பகை நாடுகளாக இருந்த வட, தென் கொரிய நாடுகள் இடையே இணக்கமான சூழல் உருவாகி உள்ளது.

இதேபோன்று வடகொரியா, அமெரிக்கா இடையே இணக்கமான சூழல் உருவாக தென்கொரியா சமரச முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இரு கொரிய நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தென்கொரிய தூதுக்குழுவினர் அமெரிக்கா சென்று அந்த நாட்டின் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினர். வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் அன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்து உள்ளதை தெரிவித்தனர்.

கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச டிரம்பும் சம்மதித்தார். இரு தலைவர்களின் சந்திப்பு, மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு ஆயத்தமாக பின்லாந்து நாட்டில் இரு கொரிய நாடுகளின் பிரதிநிதிகளும், அமெரிக்க பிரதிநிதிகளும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். 2 நாட்கள் நடந்த இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை சாதகமான சூழலில் நடந்து முடிந்து உள்ளதாக பின்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த சந்திப்பு ஹெல்சிங்கி நகருக்கு வெளியேயுள்ள 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமையான இல்லத்தில் நடைபெற்று உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. #tamilnews
Tags:    

Similar News