செய்திகள்

கலிதா ஜியாவை ஜாமினில் விடுவித்த ஐகோர்ட் தீர்ப்புக்கு வங்காளதேசம் சுப்ரீம் கோர்ட் தடை

Published On 2018-03-19 07:55 GMT   |   Update On 2018-03-19 07:55 GMT
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை ஜாமினில் விடுவித்த ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது. #KhaledaZia #Bangaladesh
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி  வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட கலிதா ஜியா, இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற ஊழல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் ஐகோர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டன. ஐகோர்ட் நீதிபதிகள் இனாயத்துர் ரஹ்மான், ஷாஹிதுல் கரீம் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் கடந்த 12-ம் தேதி இந்த மனுவின் மீது விசாரணை நடைபெற்றது.

அப்போது, கலிதா ஜியாவை வரும் மே மாதம்வரை 4 மாத இடைக்கால ஜாமினில் விடுவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஐகோர்ட்டின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அரசு முறையீடு செய்தது. இந்நிலையில், கலிதா ஜியாவை ஜாமினில் விடுவித்த ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இன்று தடை விதித்துள்ளது.

இந்த தடைக்கு கலிதா ஜியாவின் வழக்கறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வங்காளதேசம் நாட்டு வரலாற்றில் முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் இன்று எடுத்துள்ள இந்த முடிவு நீதி அமைப்பின் முடிவல்ல. அரசின் முடிவாக இதை பார்க்க வேண்டியுள்ளது. பாராளுமன்ற தேர்தல் முடியும்வரை கலிதா ஜியாவை சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்னும் ஆளும்கட்சியின் விருப்பத்தை சுப்ரீம் கோர்ட் நிறைவேற்றி வைத்துள்ளது என அவர்கள் தெரிவிக்கின்றனர். #KhaledaZia #Bangaladesh #tamilnews
Tags:    

Similar News