செய்திகள்
முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்து பாகிஸ்தான் கோர்ட் உத்தரவு
தலைமறைவாக இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட்டை முடக்கம் செய்யுமாறு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #pakistancourt #musharraf #passport
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.
இதையடுத்து, வெளிநாட்டுக்கு சென்ற அவர் தற்போது துபாயில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார். முஷரப்புக்கு எதிராக பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியததால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #tamilnews #pakistancourt #musharraf #passport