செய்திகள்

தென் ஆப்பிரிக்க துணை அதிபர் சிரில் ராமபோசா புதிய அதிபராக தேர்வு

Published On 2018-02-15 13:16 GMT   |   Update On 2018-02-15 13:16 GMT
ஊழல் புகாரில் சிக்கிய ஜேக்கப் ஷூமா அதிபர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய அதிபராக துணை அதிபர் சிரில் ராமபோசா இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். #CyrilRamaphosa
கேப்டவுண்:

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஷூமா (75). கடந்த 2009-ம் ஆண்டு முதல் இருந்து வந்தார். இவர்மீது பல ஊழல் புகார்கள் உள்ளன. தென் ஆப்பிரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவர் மீதான 78 ஊழல் வழக்குகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்தது. சமீபத்தில் இந்தியரான குப்தா குடும்பத்துடன் இணைந்து ஜேக்கப் ஷூமா ஊழல் செய்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. அதை இருவரும் மறுத்திருந்தனர்.

இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி தவிக்கும் ஷூமாவுக்கு ஆளும் ‘ஏ.என்.சி’ கட்சி எம்.பி.க்களும் எதிராக இருந்தனர். பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கட்சியில் குரல் எழுந்தது.

ஆனால், அதற்கு முன்னதாக அதிபர் பதவியை ஷுமா ராஜினாமா செய்ய கட்சித்தலைமை வலியுறுத்தியது. முதலில் மறுத்த ஷூமா பின்னர் வேறு வழியின்றி பதவி விலகினார். இந்நிலையில், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற கூட்டம் இன்று நடந்தது.

துணை அதிபரான சிரில் ராமபோசா அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால் அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதோடு, ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். #CyrilRamaphosa | #ZumaExit | #JacobZuma | #ANCNEC | #TamilNews
Tags:    

Similar News