செய்திகள்

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் மகள் போட்டி

Published On 2018-01-20 05:15 GMT   |   Update On 2018-01-20 05:15 GMT
பாகிஸ்தானில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நவாஸ் செரீப் மகள் மரியம் போட்டியிடுகிறார். அவரது தந்தை நவாஸ் செரீப்பின் தொகுதியான லாகூரில் அவர் களம் இறங்குகிறார்.#MaryamNawaz
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மகள் மரியம் (44). இவர் தீவிர அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார். பனாமா கேட் ஊழல் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி பிரதமர் பதவியையும், எம்.பி. பதவியையும் நவாஸ் செரீப் ராஜினாமா செய்தார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகினார். இந்த நிலையில் அக்கட்சியின் 2-ம் தலைமுறை தலைவராக மரியம் உருவாகி இருக்கிறார்.

பாகிஸ்தானில் இந்த ஆண்டு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதில் மரியம் போட்டியிடுகிறார். அவரது தந்தை நவாஸ் செரீப்பின் தொகுதியான லாகூரில் (என்.ஏ-120) அவர் களம் இறங்குகிறார்.

ஏற்கனவே இவர் இத்தொகுதியில் தனது தந்தைக்காக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து இருக்கிறார். எனவே இவர் இத்தொகுதிக்கு மிக அறிமுகமானவராக கருதப்படுகிறார்.

மரியம் கடந்த 1973-ம் ஆண்டு லாகூரில் பிறந்தார். 1999-ம் ஆண்டு பாகிஸ்தானில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அதை தொடர்ந்து தனது குடும்பத்தை நவாஸ் செரீப் வெளிநாட்டில் தங்க வைத்து இருந்தார். தற்போது தான் அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானில் தங்கியுள்ளனர்.

பனாமா கேட் ஊழல் வழக்கில் மரியம் பெயரும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்ற செய்தி பரவி வருகிறது. தேர்தல் போட்டியிடுவது குறித்து மரியம் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.  #TamilNews #MaryamNawaz
Tags:    

Similar News