செய்திகள்

பிலிப்பைன்ஸ்: வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 37 பேர் பலி

Published On 2017-12-24 00:01 GMT   |   Update On 2017-12-24 00:01 GMT
தெற்கு பிலிப்பைன்சின் தவாவோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நகரின் துணை மேயர் தெரிவித்துள்ளார்.
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் தவாவோ என்ற நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக நேற்று காலை ஏராளமான மக்கள் குவிந்தனர்.

அப்போது அந்த வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் எதிர்பாராத விதமாக தீ பிடித்துள்ளது. இந்த தீயானது மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடியுள்ளனர்.



இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்து, கட்டிடத்திற்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. எனவே தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அந்த கட்டிடத்திற்குள் 37 பேர் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.



இந்த விபத்து குறித்து அந்நகரின் துணை மேயரும், பிலிப்பைன்ஸ் அதிபரின் மகனுமான பாவ்லோ டூடெரெட் பேஸ்புக்கில் வெளியிட்ட செய்தியில் அந்த கட்டிடத்தில் சிக்கியிருப்பதாக கூறப்படும் 37 பேர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு இல்லை என கூறியுள்ளார்.
Tags:    

Similar News