செய்திகள்

ஈராக்: மொசூல் சண்டையில் 741 பொதுமக்களை கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

Published On 2017-11-03 07:23 GMT   |   Update On 2017-11-03 07:23 GMT
ஈராக்கின் மொசூல் நகரில் அமெரிக்க கூட்டுப்படையுடன் நடந்த சண்டையின் போது மனிதகேடயமாக பயன்படுத்திய 741 பொதுமக்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொன்ற குவித்த தகவல் வெளியாகியுள்ளது.
மொசூல்:

ஈராக்கின் 2-வது பெரிய நகரமான மொசூல் மற்றும் அதை சுற்றிய பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்தன. அவற்றை ஒருங்கிணைத்து தனிநாடு அமைத்து நிர்வாகம் செய்து வந்தனர்.

அப்பகுதியை மீண்டும் கைப்பற்ற அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் ஐ.எஸ். தீவரவாதிகளுடன் போரிட்டது. இந்த சண்டை பல மாதங்கள் நீடித்தது. இறுதியில் மொசூல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீட்கப்பட்டன.

மொசூலில் நடந்த சண்டையின் போது அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படைகள் தீவிரவாதிகள் மறைவிடத்தின் மீது குண்டு வீச்சு நடத்தியது. இத்தாக்குதல் கடந்த 2016 நவம்பர் முதல் 2017 ஜூலை மாதம் வரை நடந்தது.

அப்போது அங்கிருந்து குடும்பத்தினருடன் பொது மக்கள் தப்பி ஓடினர். அவர்களை பிடித்து மனித கேடயமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தினர். இறுதியில் அவர்களை கழுத்தை அறுத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொன்றனர்.

இது போன்று 741 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த தகவலை ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் சயீத் ராத் அல் உசேன் தெரிவித்தார். மேலும் ஈராக் ராணுவம் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய குண்டு வீச்சில் பொதுமக்கள் 461 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தத்தில் மொசூல் சண்டையின் போது 2,521 பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1,673 பேர் காயம் அடைந்துள்ளனர். 8 லட்சத்து 24 ஆயிரம் பொதுமக்கள் வெளியேறியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
Tags:    

Similar News