செய்திகள்

மெக்சிகோ சிறை கலவரத்தில் 13 பேர் பலி

Published On 2017-10-11 11:09 GMT   |   Update On 2017-10-11 11:09 GMT
மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் நுய்வோ லியோன் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அளவுக்கதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் தொடர்பாக விசாரணை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் இங்குள்ளனர்.

நாட்டில் உள்ள பல சிறைகள் போதுமான படுக்கை மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமல் மாட்டு கொட்டில்களுக்கு இணையாக உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் நுய்வோ லியோன் மாநிலத்திற்குட்பட்ட மான்டெர்ரி நகரில் உள்ள கேடரெய்ட்டா சிறையில் நேற்று முன்தினம் இரவு கைதிகள் தீடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 250 கைதிகள் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இதில் ஒரு கைதி கொல்லப்பட்டார். சிறை அதிகாரிகளை கைதிகள் சிறைபிடித்தனர்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் அந்த சிறைக்கு கூடுதலாக போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள் பதற்றத்துடன் சிறை வாசலில் குவியத் தொடங்கினர். விடியவிடிய தொடர்ந்த கலவரத்தை கட்டுப்படுத்தவும், சிறைபிடிக்கப்பட்ட அதிகாரிகளை மீட்கவும் மாலை 5 மனியளவில் ஆயுத பிரயோகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

இதை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், கைதிகளுக்கு இடையிலான மோதல்களிலும் 13 பேர் உயிரிழந்ததாக சிறை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News