செய்திகள்

அணு ஆயுதங்களுக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு

Published On 2017-10-06 09:43 GMT   |   Update On 2017-10-06 09:43 GMT
இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்புக்கு வழங்கப்படுகிறது.
ஓஸ்லோ:

அணு ஆயுதங்களை ஒழிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 2007-ம் ஆண்டு International Campaign to Abolish Nuclear Weapons (ICAN) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது உலகில் உள்ள 101 நாடுகளை சேர்ந்த 468 அமைப்புகள் இணைந்து ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த ‘ஐகேன்’ அமைப்புடன் உலக நாடுகளில் அணு ஆயுதங்களை ஒழிக்கவும், அணு ஆயுதங்களால் ஏற்படும் மிகப்பெரிய பேரழிவை சுட்டிக்காட்டியும் விழிப்புணர்வு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏராளமான அணு ஆயுதங்களை குவித்து வைத்திருந்த ஈரான் நாட்டை அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் கையொப்பமிட வைத்ததிலும், பிறநாடுகளில் அணு ஆயுதங்கள் உற்பத்தியை கணிசமாக குறைத்ததிலும், வடகொரியாவின் அணு ஆயுத வெறிக்கு எதிராக சர்வதேச சமூகத்தை ஒன்றிணைத்ததிலும் இந்த அமைப்பின் பணி முக்கியமானதாக கருதப்படுகிறது.


இந்நிலையில், 2017-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு ‘ஐகேன்’ அமைப்பு தேர்வாகியுள்ளது. நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டு நோபல் கமிட்டியின் தலைவர் பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் வெளியிட்டுள்ளார்.

மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுத பயன்பாட்டை தடுக்கவும், அணு ஆயுதங்கள் பரவுவதை தடுக்க பல்வேறு ஒப்பந்தங்களை ஏற்படுத்த உறுதுணையாக இருந்ததற்காகவும் ‘ஐகேன்’ அமைப்புக்கு இந்த பரிசு அளிக்கப்படுவதாக பெரிட் ரீய்ஸ்-ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News