செய்திகள்

தெற்கு சூடானில் ராணுவம் - கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்: 25 பேர் பலி

Published On 2017-09-19 15:01 GMT   |   Update On 2017-09-19 15:02 GMT
தெற்கு சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 25 பேர் உயிரிழந்தனர்.

ஜூபா:

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் இருந்து பிரிந்து கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு தெற்கு சூடான் என்ற புதிய நாடு உதயமானது. அதனை தொடர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு முதல் தெற்கு சூடானில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

இதற்கிடையே அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகிய இருவருக்கும் இடையே அதிகாரப் போட்டி நிலவி வருகிறது. இதனால் அவர்களது ஆதரவாளர்களும் 2 கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிட்டு வருகின்றனர். இரு தரப்புக்கும் தனித்தனியே ராணுவ வீரர்களின் ஆதரவும் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டின் நிஹியால் டியு நகரில் திங்களன்று அரசு ஆதரவாளர்களுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அப்பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதற்காக பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது திடீரென ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. 

இந்த மோதலில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட சுமார் 25 பேர் உயிரிழந்தனர் என அப்பகுதியைச் சேர்ந்த அரசு அதிகாரி தெரிவித்தார். ஆனால் கிளர்ச்சியாளர்களின் செய்தி தொடர்பாளர் 18 பேர் மட்டுமே இந்த மோதலில் மரணமடைந்ததாக கூறியுள்ளார். சில கிளர்ச்சியாளர்களின் தூண்டுதலினால் மோதல் நடந்ததாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
Tags:    

Similar News