செய்திகள்

பாலைவனங்கள் நிறைந்த அரபு நாடுகளில் மணலுக்கு வந்த பஞ்சம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

Published On 2017-09-13 08:29 GMT   |   Update On 2017-09-13 08:29 GMT
பாலைவனங்கள் நிறைந்த அரபு நாடுகளில் மணலுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறையால் வெளிநாடுகளில் இருந்து பல கோடி டாலர்கள் செலவில் மணல் இறக்குமதி நடைபெற்று வருகிறது.
துபாய்:

உலகம் முழுவதும் மக்கள்தொகை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்களாக உருமாறி வருகின்றன. கட்டுமானத்துக்கு தேவையான கற்கள், கண்ணாடி, சிமெண்ட் கலவை ஆகியவற்றுடன் மணல் சேர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால் தங்கத்துக்கு நிகராக மணலின் விலையும் நாளொரு மாற்றம் - பொழுதொரு ஏற்றமாக உயர்ந்துகொண்டே போகிறது.

குறிப்பாக, கட்டுமானப் பணிகளுக்கு ஆற்றுப் படுகைகளில் இருந்து எடுக்கப்பட்டும் மணல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் இயந்திரங்களை கொண்டு அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் தற்போது தரிசாகிப்போய் கிடக்கின்றன.

கேரளாவில் உள்ள பம்பை, மணிமாலா, அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து அளவுக்கதிகமாக மணல் சுரண்டப்பட்டதால் அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, வறண்டு காணப்படுகிறது.

சீனாவில் உள்ள நன்னீர் ஏரியான போயாங் ஏரி, மணல் சுரண்டலால் வறண்டுகொண்டே வருகிறது. கென்யா நாட்டில் அளவுக்கதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றுப்படுகைகள் வறண்டுப்போய் அங்குள்ள மக்கள் குடிநீருக்கு திண்டாடும் பரிதாப நிலை உருவாகி விட்டது. மொராக்கோ மற்றும் கரிபியன் நாடுகளில் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து மணல் சுரண்டப்பட்டதால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இப்படி, ஆறுகளின் அடிப்பகுதியில் இருக்கும் மணல் பாய்ந்தோடிவரும் நீரை சுத்திகரிப்பதுடன் அருகாமையில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வறண்டுப் போகாமல் பாதுகாக்கிறது. இதை மறந்து கிடைத்தவரை லாபம், தோண்டத்தோண்ட இன்பம் என்ற ரீதியில் உலகம் முழுவதும் தோண்டப்படும் பொருட்களில் 85 சதவீதம் மணலாகதான் இருக்கிறது.

ஆண்டுதோறும் 40 பில்லியன் டன்கள் அளவுக்கு மணல் தோண்டப்படுவதாகவும், உலகளாவிய அளவில் மணல் குவாரிகளின் வர்த்தக நிதி பரிமாற்றம் 70 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உள்ளதாகவும் ஒரு அறிக்கை குறிப்பிட்டுகிறது. அதாவது, சராசரியாக உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக மணல் இடம்பிடித்துள்ளது.

அந்த வகையில், நகரமயமாதலும், கட்டுமானப் பணிகளும், மணலுக்கான தேவையும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாய் உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டு கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.


மிகப்பரவலான பாலைவனப் பகுதிகள் நிறைந்த அரபு நாடுகள் மணலை ஏன் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும்? என சிலருக்கு எழும் சந்தேகம் நியாமானதுதான். ஆனால், அந்த பாலைவனங்களில் உள்ள மணல் அனைத்தும் மிருதுவாக உள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை.

எனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் சுமார் 456 பில்லியன் டாலர்கள் அளவிலான மணல், கற்கள் மற்றும் சரளைக்கற்களை தங்கள் நாட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கடந்த 2014-ம் ஆண்டு இறக்குமதி செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

எங்கிருந்து எந்த நாடு ஏற்றுமதி செய்தாலும், இறக்குமதி செய்தாலும் உலகில் மிக வேகமாக கரைந்துக் காணாமல்போய், விரைவில் தீர்ந்துப்போகும் அபாயகரமான இயற்கை வளங்களின் பட்டியலில் தற்போது மணலும் முக்கிய இடம்பிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News