செய்திகள்

'தவறான நடவடிக்கைகளை நிறுத்துங்கள்' - வடகொரியாவிற்கு சீனா அறிவுரை

Published On 2017-09-04 19:10 GMT   |   Update On 2017-09-04 20:44 GMT
சர்வதேச தடையையும் மீறி அணுகுண்டு பரிசோதனை மேற்கொண்ட வடகொரியாவிடம் தவறான நடவடிக்கைகள் எடுப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என அதன் நட்புநாடான சீனா அறிவுரை கூறியுள்ளது.
பீஜிங்:

உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார தடைகளையும் பொருட்படுத்தாத வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்துள்ளது.

இந்நிலையில், வட கொரியா நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிக்கு இடையில் உள்ள சுங்ஜிபேகாம் பகுதியில் கடந்த 3ம் தேதி, சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் வடகொரியா பரிசோதனை செய்தது. இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது.



இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த பிரச்சனை குறித்து விவாதிக்க ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது பேசிய ஐ.நா. சபைக்கான சீன தூதர் லியூ ஜீயி, தவறான நடவடிக்கைகள் மேற்கொள்வதை வடகொரியா நிறுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

நிலைமையை மோசமாக்கும் தவறான நடவடிக்கைகள் மேற்கொள்வதை நிறுத்திக்கொள்ளுமாறு வடகொரியாவை நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம். சொந்த நலன்களை காப்பதற்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வழியில் இறங்குங்கள்.

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் போது அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா மேற்கொண்டுவரும் அணுஆயுத சோதனைகள் மற்றும் ராணுவ நடவக்கைகளை நிறுத்துவது குறித்தும் யோசனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News