செய்திகள்

மணிக்கு 350 கிலோமீட்டர் - உலகின் அதிவேக புல்லெட் ரெயில்: சீனாவில் செப்.21-ல் அறிமுகம்

Published On 2017-08-21 11:44 GMT   |   Update On 2017-08-21 11:44 GMT
1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லெட் ரெயில் சேவை சீனாவில் அடுத்த மாதம் தொடங்குகிறது.
பீஜிங்:

உலகில் உள்ள அதிவேக ரெயில் சேவைகளில் 60 சதவீதம் வழித்தடங்கள் (22 ஆயிரம் கிலோமீட்டர்) சீனாவில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங் - டியான்ஜின் நகரங்களுக்கு இடையிலான அதிவேக புல்லெட் ரெயில் சேவைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிலோமீட்டராக உயர்த்தப்பட்டது.

ஆனால், இந்த வழித்தடத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் இரு ரெயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர்.


இதையடுத்து, புல்லட் ரெயில்களின் வேகம் 250-300 கிலோமீட்டராக குறைக்கப்பட்டது. பின்னர், வழித்தடங்கள் நவீனமயமாக்கப்பட்டு பாதுகாப்பான வகையில் சுமார் 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு புதிய தலைமுறைக்கான ரெயில் என்ஜின்களும் தரம் உயர்த்தப்பட்டன. இந்த வழித்தடத்தில் ‘ஃபுக்ஸிங்’ என பெயரிடப்பட்டுள்ள நவீன ரெயிலின் சோதனை ஓட்டம் கடந்த மாதம் 27-ம் தேதி வெற்றிகரமாக அமைந்தது.

இதையடுத்து, சீனத் தலைநகர் பீஜிங்கை தொழில்நகரமான ஷங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லெட் ரெயில் சேவை சீனாவில் வரும் செப்டம்பர் மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.
Tags:    

Similar News