செய்திகள்

சீனாவில் கடும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவு- கட்டிடங்கள் குலுங்கின

Published On 2017-08-08 14:47 GMT   |   Update On 2017-08-08 14:47 GMT
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.
பீஜிங்:

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. குவாங்கியான் நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள ஜியுஜாய்கோவ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 6 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 அலகாக பதிவானதாக சீனாவின் நிலநடுக்க ஆய்வு மையம் கணித்துள்ளது.

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஒன்று திரண்டனர். சில கட்டிடங்களில் உள்ள டைல்கள் உடைந்து விழுந்தன. ஆனால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக மாகாண தலைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். 
Tags:    

Similar News