செய்திகள்
நவாஸ் ஷெரிப் நீக்கம் - பாகிஸ்தான் புதிய பிரதமராக சகோதரருக்கு வாய்ப்பு?
பாகிஸ்தானில் பனாமா ஊழல் வழக்கில் பிரதமர் நவாஸ் ஷெரிப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அவரது சகோதரர் பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
கராச்சி:
நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று முடிவடைந்தது. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர். இவ்வழக்கில் நவாஸ் ஷெரிப் குற்றவாளி என தீர்ப்பு வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அவ்வாறு நடைபெரும் பட்சத்தில் அவரது பிரதமர் பதவி பறிக்கப்படும்.
இந்நிலையில், நவாஸ் ஷெரிப் தலைமையிலான கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆஷிப், நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரரும் பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியான ஷெபாஸ் ஷெரிப் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்குபெற்றனர். இக்கூட்டத்தில் நவாஸ் ஷெரிப் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அடுத்த பிரதமராக யாரை வைப்பது என்பது குறித்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரிப், பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை பாதுகாப்புத் துறை மந்திரியான கவாஜா ஆஷிப் தற்காலிக பிரதமராக பொறுப்பு வகிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.