செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின்னர் காணாமல் போன இந்தியர் மரணம்

Published On 2017-05-22 13:29 GMT   |   Update On 2017-05-22 13:29 GMT
எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பின்னர், கீழே இறங்கும்போது காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மரணம் அடைந்தார். அவர் சுமார் 8200 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டு:

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கான, மலையேற்ற சீசன் இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. இந்த ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு 371 மலையேற்ற வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்களில் இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ரவிக்குமாரும் (வயது 27) ஒருவர்.

மலையேற்ற வழிகாட்டியான ஷெர்பாவின் துணையுடன் கடந்த எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய ரவிக்குமார், 8848 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை சனிக்கிழமை பிற்பகல் எட்டினார். ஆனால், கீழே இறங்கும்போது, 8200 மீட்டர் உயரத்தில் உள்ள பால்கனி என்று அழைக்கப்படும் பகுதியை எட்டியபோது, மோசமான வானிலை நிலவியது.

இதன் காரணமாக ரவிக்குமாரும், அவருடன் சென்ற ஷெர்பாவும் அங்கிருந்து தவறி விழுந்து காணாமல் போயினர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், ரவிக்குமார் மரணம் அடைந்துவிட்டதாகவும், அவருடன் சென்ற ஷெர்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இதன்மூலம், இந்த ஆண்டில் மட்டும் மலையேற்றத்தின்போது 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News