search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mount Everest"

    • மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன
    • 1953ல் இருந்து சுமார் 300 பேர் மலையேறும் முயற்சியில் உயிரிழந்துள்ளனர்

    இமயமலைத் தொடரில் சீனா மற்றும் நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உள்ள உலகின் உயரமான மலைச்சிகரம், மவுன்ட் எவரெஸ்ட் (Mount Everest).

    இதன் உயரம் 8,849 மீட்டர் (29,032 அடி).

    மவுன்ட் எவரெஸ்ட் மலைச்சிகரத்தின் வடக்கில் திபெத்தும், தெற்கில் நேபாளமும் உள்ளன.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொடும் சாதனைக்காக பலரும் தங்களை தயார்படுத்தி கொண்டு உயிரை பணயம் வைத்து கடினமான இந்த மலையேற்றத்தில் ஈடுபடுவது வழக்கம்.

    1953ல் இருந்து சுமார் 300 பேர் இந்த முயற்சியில் உயிரிழந்துள்ளனர்.

    எவரெஸ்ட் பேஸ் கேம்ப் (Everest base camp) எனப்படும் மலையடிவார தளம் 18,000 அடி உயரத்தில் உள்ளது. அங்கிருந்து மலையுச்சியை அடையும் முயற்சியில் பனிமழை, பனிப்புயல், பனிச்சரிவு உள்ளிட்ட காரணங்களால், காணாமல் போனவர்களை கண்டு பிடிப்பது மிக கடினமான செயலாக இருந்து வருகிறது.

    இந்நிலையில், இச்சிக்கலை தவிர்க்கும் முயற்சியாக நேபாள அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து பேசிய நேபாள சுற்றுலா துறை தலைமை அதிகாரி ராகேஷ் குருங், "எவரெஸ்ட் மலையேறும் முயற்சியில் ஈடுபடும் அனைத்து வீரர்களுக்கும் அவர்களின் உடையில் அணிந்து கொள்ளும் வகையில் ஒரு மின்னணு "சிப்" அரசாங்கத்தால் வழங்கப்படும். இதன் மூலம் மலையுச்சியை அடையும் முயற்சி பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், அவசர காலகட்டங்களில் தேடுதல் பணிகளை எளிதாக்கவும் முடியும்" என தெரிவித்தார்.

    2023ல்  ஒரு இந்தியர், ஒரு சீனர், 4 நேபாளிகள் உட்பட 12 மலையேறும் வீரர்கள் உயிரிழந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அறிவித்தது.

    • எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகிறார்.
    • மலை ஏறும் பருவத்தின்போது மலை ஏறுபவர்கள் மீட்கப்படுவது முன்னிலை படுத்தப்படுகிறது.

    எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய மலை ஏறுபவரை தைரியமாக மீட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜெஸ்மன் தமாங் என்ற மலையேற்ற வீரர் டூவிட்டரில் பகிர்ந்துள்ள இந்த வீடியோவை பார்த்த வலைதளவாசிகள் மீட்பு குழுவினருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந்தேதி தமாங் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் எவரெஸ்ட் சிகரத்தில் ஆழமான விரிசலில் சிக்கிய ஒருவர் பனியில் புதைந்த நிலையில் காணப்படுகிறார். மீட்பு பணியாளர்கள் அவரது தோள்களில் கயிற்றை கட்டி மீட்பது போன்று காட்சிகள் உள்ளது. இதுதொடர்பான அவரது பதிவில் எவரெஸ்ட் சிகரத்தில் பல துணிச்சலான மீட்புகள் நடைபெறுகின்றன.

    மலை ஏறும் பருவத்தின்போது மலை ஏறுபவர்கள் மீட்கப்படுவது முன்னிலை படுத்தப்படுகிறது. ஆனால் வழிகாட்டிகளையும் மீட்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். மலையேறிகளின் கனவுகளை நனவாக்கும் வழிகாட்டிகளின் தியாகங்கள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் அனைத்தையும் நாம் நினைவு கூற வேண்டும் என்ற குறிப்புடன் வெளியான இந்த வீடியோவை பார்த்த இணையதள பயனர்கள் மீட்பு பணியை செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

    • மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார்.
    • 60 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி

    கணவன்-மனைவி இடையே உள்ள அன்யோன்யம் மற்றும் அன்புக்கு உதாரணமாக பல சம்பவங்களை கேள்விப்பட்டிருக்கிறோம், பார்த்திருக்கிறோம். அந்த வகையில், 60 வயது நிரம்பிய ஷரத் குல்கர்னி, வயதையும் பொருட்படுத்தாமல் தன் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஷரத் குல்கர்னியும், அவரது மனைவி அஞ்சலியும் மலையேற்ற வீரர்கள். இருவரும் உலகின் உயரமான ஏழு சிகரங்களிலும் ஏற முடிவு செய்தனர். இதற்காக தீவிர பயிற்சி எடுத்த அவர்கள் ஒன்றாக இணைந்து 2019ம் ஆண்டு மே 22ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயாரானார்கள். ஆனால், மலையேறும்போது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக அஞ்சலி உயிரிழந்தார். அப்போது எப்படியும் சிகரத்தில் ஏற வேண்டும் என அவர் தன் கணவரிடம் கூறியிருந்தார்.

    எனவே, மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முடிவு செய்தார். அதன்படி, மனைவி இறந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த மாதம் 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

    இந்த வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இந்தியாவின் ஒரே மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.

    • கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
    • மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார்.

    காத்மாண்டு:

    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைவது மலையேற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் மலையேற்ற சீசனில் ஏராளமான வீரர்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகின்றனர். அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கென வழிகாட்டிகள் உள்ளனர். அவர்களும் வீரர்களுடன் சிகரத்தில் ஏறி இறங்குகின்றனர்.

    அவ்வகையில் இந்த ஆண்டு நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி கமி ரீட்டா (வயது 53), மலையேற்ற வீரர்களுடன் இன்று சிகரத்தை அடைந்தார். இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை அவர் சிகரத்தை அடைந்துள்ளார். அத்துடன் தன் வாழ்நாளில் 28 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார்.

    அவர் பாரம்பரியமான தென்கிழக்கு மலைமுகட்டு பாதை வழியாக சென்று 8,849 உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்ததாக நேபாள சுற்றுலாத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.

    கமி ரீட்டா முதன் முதலில் 1994ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். மலையேற்றம் தடை செய்யப்பட்ட ஆண்டுகளைத் தவிர, ஒவ்வொரு ஆண்டும் சிகரத்தில் ஏறி உள்ளார்.

    தென்கிழக்கு மலைமுகட்டு பாதையை முதன்முதலாக 1953ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகியோர் பயன்படுத்தினர். அதன்பின்னர் இந்த பாதையில் அதிக வீரர்கள் பயணிக்கத் தொடங்கி, தற்போது மிகவும் பிரபலமான பாதையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கமி ரீட்டாவுக்கு அடுத்தபடியாக, மற்றொரு ஷெர்பா 27வது முறை சிகரத்தை அடைந்துள்ளார். அவர் கடந்த வாரம் இந்த சாதனையை எட்டினார்.

    பிரிட்டனைச் சேர்ந்த கென்டன் கூல் என்ற வீரர், 17வது முறையாக கடந்த வாரம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். வெளிநாட்டு வீரர்களில் இவர் அதிக முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    • மரண மண்டலம் என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார்.
    • எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது.

    பெர்த்:

    ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்தவர் ஜேசன் பெர்னார்ட் கென்னிசன் (வயது 40). மலையேற்ற வீரரான இவர், சமீபத்தில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். 8849 மீட்டர் உயரம் கொண்ட சிகரத்தை வெற்றிகரமாக அடைந்த அவர், அங்கிருந்து கீழே இறங்கும்போது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டிகள் துணையுடன் முகாம் நோக்கி வந்தார். ஆனால் கடுமையான காற்று வீசியதால் முகாமிற்கு திரும்ப முடியவில்லை. சிறிது நேரத்திற்குள் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் மலையேற்ற வீரர்களால் பொதுவாக 'மரண மண்டலம்' என்று அழைக்கப்படும், 8000 மீட்டர் உயரமுள்ள மலைப் பகுதியில் கென்னிசன் இறந்துள்ளார். அவரது உடல் இன்னும் மலையிலேயே உள்ளது. உடலை மீட்டு கீழே கொண்டு வரும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    கென்னிசனின் மரணம் குறித்த செய்தி அறிந்து அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர். மிகவும் தைரியமான கென்னிசன் சிகரத்தை அடைய வேண்டும் என்ற தனது இலக்கை அடைந்தார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக வீட்டிற்கு திரும்பவில்லை, என அவரது குடும்பத்தினர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக ஹிமாலயன் டைம்ஸ் செய்திக்கு வழிகாட்டி ஒருவர் அளித்த பேட்டியில், 'சிகரத்தில் இருந்து கீழே இறங்கும் போது கென்னிசன் அசாதாரணமாக இருப்பதை கவனித்தோம். அவருடன் இருந்த இரண்டு ஷெர்பா வழிகாட்டிகள், கடல் மட்டத்தில் இருந்து 8,400மீ உயரத்தில் உள்ள பால்கனி பகுதிக்கு இறங்க உதவினார்கள்' என்றார்.

    எவரெஸ்ட் மலையேற்றத்துக்கான இந்த சீசனில் இது பத்தாவது மரணம் என்று கூறப்படுகிறது. நேபாள சுற்றுலாத் துறையின் தகவலின்படி, இந்த சீசனில் இதுவரை 450 பேர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

    • ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.
    • 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார்.

    சென்னை:

    சென்னை கோவளத்தில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். 27 வயதான இவர் அலைச் சறுக்கு போட்டிகளில் சர்வ தேச அளவில் பல வெற்றிகளை குவித்துள்ளார்.

    அலைச்சறுக்கு பயிற்சியாளராக இருந்த ராஜசேகருக்கு மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சுமார் 1 வருட காலம் மலையேற்றத்திற்கான பயிற்சிகளை எடுத்தார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதிக்க வேண்டும் என்பது அவரது கனவு.

    இதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டார். 6 மலைகளில் ஏறி அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

    எவரெஸ்ட சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனி, குளிரை தாங்க வேண்டும் என்பதற்காக மணாலி, சோலாங், நேபாள பகுதிகளில் தங்கி உடலை யும், மனதையும், குளிருக்கு தயார் செய்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தயார் ஆனார்.

    கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி எவரெஸ்ட் மலையடிவார முகாமில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். 8,850 மீட்டர் உயரத்தை கடந்த 19-ந்தேதி அதிகாலை 5.30 மணியளவில் அடைந்தார். இதன் மூலம் அவர் தனது கனவை நனவாக்கியுள்ளார்.

    ஒரு மாதத்துக்கும் மேலான பயண அனுபவத்தில் பல கடுமையான சோதனைகள், தடைகளை கடந்து எவரெஸ்ட் சிகரத்தை ராஜசேகர் அடைந்து சாதித்து காட்டியுள்ளார்.

    • முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார்.
    • 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

    பிரித்தானிய முன்னாள் ராணுவ வீரர் தனது இரண்டு கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் செயற்கை கால்களுடன் உலகின் மிக உயரமான சிகரத்தை ஏறி சாதனை படைத்துள்ளார்.

    43 வயதான ஹரி புத்தமகர், நேற்று முன்தினம் பிற்பகல் 8848.86 மீட்டர் உச்சத்தை எட்டினார்.

    இரட்டை கால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர் ஹரி புத்தமகர், அந்த பிரிவில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் நபர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார் என சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    கடந்த 2010ம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கத்திற்காக ஆப்கானிஸ்தானில் நடந்த போரின்போது பிரிட்டிஷ் கோர்காவின் சிப்பாயாக போரிட்ட புத்தமகர் தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார்.

    2017ம் ஆண்டில் எவரெஸ்ட் உட்பட, பார்வையற்றவர்கள், இரட்டை உறுப்புகள் இழந்தவர்கள் மற்றும் தனியாக ஏறுபவர்கள் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மலைகளில் ஏறுவதைத் தடைசெய்யும் மலையேறும் விதிமுறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இதனால், 2018ம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தை ஏறும் திட்டத்தை புத்தமகர் ஒத்திவைத்தார்.

    பிறகு, தடைக்கு எதிராக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.
    • மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.

    காத்மாண்ட்:

    இமயமலையின் எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமான சிகரமாகும்.

    இந்த சிகரத்தில் ஏறி சாதனை படைக்க மலைஏறும் வீரர்கள் பலரும் விரும்புவது வழக்கம். அதன்படி மாரடைப்பு ஏற்பட்டு இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திய சுசான் லியோபோல்டினா ஜீசஸ் என்ற வீராங்கனை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற விரும்பினார்.

    இதன்மூலம் ஆசியாவில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்ட நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைக்க விரும்பினார். இதற்காக நேபாள அரசிடம் உரிய அனுமதி பெற்று அவர் மலை ஏற தொடங்கினார்.

    எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட மலையேற்ற வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் முதல் 2 கட்டங்களை தாண்ட நீண்ட நேரம் எடுத்து கொண்டார். இதனை அறிந்த மருத்துவ குழுவினர் அவரது உடல் நிலை மலை ஏற போதுமானதாக இல்லை எனக்கூறி அவரை மலை ஏற்றத்தை நிறுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தினர். ஆனால் சுசான் லியோபோல்டினா ஜீசஸ் மலை ஏற்றத்தை நிறுத்தாமல் தொடர்ந்து ஏறினார். ஒரு கட்டத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து மருத்துவ குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சுசான் லியோபோல்டினா ஜீசசை மீட்டு காத்மாண்டு கொண்டு வந்தனர்.

    அங்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதயத்தில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திகொண்டு எவரெஸ்டு சிகரம் ஏறிய வீராங்கனை சுசான் லியோபோல்டினா ஜீசஸ் இறந்தது மலை ஏற்றக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.
    • முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    சென்னை :

    எந்தவொரு சாதனையின் உச்சத்தையும் நாம் எவரெஸ்ட் சிகரத்தோடுதான் ஒப்பிடுகிறோம். அத்தகைய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார்.

    இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற முத்திரையோடு தமிழகம் திரும்புவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் அவர் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

    சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவு. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதித்தார். அதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஏசியன் டிரெக்கிங் நிறுவனத்தின் 37 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது பயணத்தை தொடங்கினார்.

    இதுகுறித்து முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

    எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்ததும் ஏசியன் டிரெக்கிங் எனும் தனியார் நிறுவனத்தை அணுகினேன். அப்போது அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதென்றால் மலையேறும் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 5 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நான் மலையேறும் படிப்பை முடிக்காததால் காஷ்மீர் லடாக்கில் உள்ள 6 ஆயிரத்து 496 மீட்டர் உயர மலையில் ஏறுவதாக தெரிவித்தேன். அதன்படி, அந்த மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதிபெற்றேன். எவரெஸ்ட் சிகரம் ஏற தகுதிபெற்ற அதேவேளையில் இந்த சாதனையை நிறைவேற்ற பொருளாதார நெருக்கடி முட்டுக்கட்டையாக இருந்தது.

    எவரெஸ்ட் மலையேற ரூ.45 லட்சம் வரை தேவைப்படும் என தெரிவித்ததும் சாதிக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

    இதன்காரணமாக அடுத்தகட்டமாக தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கினேன். முதற்கட்டமாக எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் ரூ.20 லட்சம் நிதி திரட்டினேன்.

    இந்தநிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் மலையேற இருப்பது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டிக்கு தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர் அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    அதேவேளையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் உதவினார். இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையோடு திரும்புவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மீண்டும் மலையில் இருந்து இறங்குவது என இந்த பயணம் முடிவடைய 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

    முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    நேபாளத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர், 24வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
    காத்மாண்டு:

    நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்தவர் காமி ரீட்டா ஷெர்பா (வயது 50). பிரபல மலையேற்ற வீரரான இவர், இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் (8,848 மீட்டர்) இதுவரை 23 முறை ஏறி உலக சாதனை படைத்திருந்தார். கடந்த 15-ம் தேதி இந்த சாதனையை அவர் நிகழ்த்தினார்.

    இந்நிலையில், இன்று மீண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் ஷெர்பா. இதன்மூலம் 24 முறை எவரெஸ்டில் ஏறி, தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.

    செவன் சமிட் டிரக்ஸ் என்ற நிறுவனத்தில் மலையேற்ற வழிகாட்டியாக பணியாற்றி வரும் காமி ரீட்டா ஷெர்பா, இந்த முறை இந்தியாவைச் சேர்ந்த போலீஸ் குழுவிற்கு வழிகாட்டியாக எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றார். எவரெஸ்ட் உச்சியை வெற்றிகரமாக அடைந்த பின்னர், அவர்கள் அனைவரும் பத்திரமாக அடிவார முகாம்களுக்கு திரும்பினர்.



    1994ம் ஆண்டில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வரும் ஷெர்பா, 1995ல் மலையேறவில்லை. அந்த ஆண்டில் கடுமையான பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற குழுவினர் உயிரிழந்ததால், மலையேறும் முயற்சியை கைவிட்டார். ஆனால் மலையேறுவதில் ஆர்வம் கொண்ட அவர், தனது முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி வருகிறார். குறைந்தது 25 முறையாவது எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்பதே இவரது விருப்பம்.

    பழங்குடியின மக்களான ஷெர்பாக்கள் மலையேறுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால், மலையேற்ற வீரர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார்.
    காத்மாண்டு:

    நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு முதல் ஏறி வருகிறார். 2017-ம் ஆண்டு அபா ஷெர்பா, புர்பா தாஷி ஷெர்பா ஆகிய வீரர்களுடன் எவரெஸ்ட் சிகரத்தை 21-வது முறையாக ஏறி கமி ரிதா ஷெர்பா சாதனையை பகிர்ந்து கொண்டார்.



    மற்ற 2 வீரர்களும் ஓய்வு பெற்ற நிலையில் கடந்த ஆண்டு 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி கமி ரிதா ஷெர்பா புதிய சாதனையை படைத்தார். இந்த நிலையில் 23-வது முறையாக தற்போது எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு தன்னுடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து உள்ளார்.
    உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த 5 பழங்குடியின மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பாராட்டினார். #PMModi
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள ஆஷரம்ஷாலாஸ் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி சிகரத்தில் ஏற தொடங்கினர். ஆனால் அவர்களில் 5 மாணவர்கள் மட்டுமே எவரெஸ்ட் சிகரத்தை வெற்றிகரமாக அடைந்தனர். மீதி 5 மாணவர்களால் பயணத்தை முடிக்க முடியவில்லை.

    இதையடுத்து, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த உமாகந்த் மகாவி, பர்மேஷ் அலே, மனிஷா துர்வே, கவிதாஸ் காத்மோட் மற்றும் விகாஸ் சோயம் ஆகிய 5 மாணவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் மற்றும் காவல்துறையில் பணி வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி சுந்தீர் முகந்திவார் தெரிவித்தார். மற்ற 5 மாணவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.



    இந்நிலையில், எவரெஸ்ட்டில் ஏறி சாதனை படைத்த மாணவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிரா மாநில முதல்மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மாநில உள்துறை மந்திரி ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.  #PMModi
    ×