search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கிய முதல் தமிழ்ப்பெண்: சாதனையோடு திரும்புவேன் என பேட்டி
    X

    சாதனை பயணத்தை தொடங்கிய முத்தமிழ்ச்செல்வி. முத்தமிழ்ச்செல்வி

    எவரெஸ்ட் சிகரம் ஏறும் பயணத்தை தொடங்கிய முதல் தமிழ்ப்பெண்: சாதனையோடு திரும்புவேன் என பேட்டி

    • அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.
    • முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    சென்னை :

    எந்தவொரு சாதனையின் உச்சத்தையும் நாம் எவரெஸ்ட் சிகரத்தோடுதான் ஒப்பிடுகிறோம். அத்தகைய எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்த 38 வயதான முத்தமிழ்ச்செல்வி பெற்றுள்ளார்.

    இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற முத்திரையோடு தமிழகம் திரும்புவேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம் அவர் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

    சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட முத்தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

    உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவு. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்ச்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த மாதம் 8-ந்தேதி மகளிர் தினத்தன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ்ச்செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியை அடைந்து முத்தமிழ்ச்செல்வி சாதித்தார். அதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் ஏசியன் டிரெக்கிங் நிறுவனத்தின் 37 பேர் கொண்ட குழுவினருடன் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தனது பயணத்தை தொடங்கினார்.

    இதுகுறித்து முத்தமிழ்ச்செல்வி கூறியதாவது:-

    எனக்கு விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. எனது பெற்றோர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதால் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எனது ஆர்வத்துக்கும், முயற்சிக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை.

    எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்ததும் ஏசியன் டிரெக்கிங் எனும் தனியார் நிறுவனத்தை அணுகினேன். அப்போது அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதென்றால் மலையேறும் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது 5 ஆயிரத்து 500 மீட்டர் உயரம் உள்ள மலையில் ஏறி இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    நான் மலையேறும் படிப்பை முடிக்காததால் காஷ்மீர் லடாக்கில் உள்ள 6 ஆயிரத்து 496 மீட்டர் உயர மலையில் ஏறுவதாக தெரிவித்தேன். அதன்படி, அந்த மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதிபெற்றேன். எவரெஸ்ட் சிகரம் ஏற தகுதிபெற்ற அதேவேளையில் இந்த சாதனையை நிறைவேற்ற பொருளாதார நெருக்கடி முட்டுக்கட்டையாக இருந்தது.

    எவரெஸ்ட் மலையேற ரூ.45 லட்சம் வரை தேவைப்படும் என தெரிவித்ததும் சாதிக்க வேண்டும் என்ற எனது எண்ணம் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டது. இருந்தாலும் சாதித்தே ஆக வேண்டும் என்ற வெறி எனக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

    இதன்காரணமாக அடுத்தகட்டமாக தேவையான நிதியை திரட்டும் முயற்சியில் இறங்கினேன். முதற்கட்டமாக எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் ரூ.20 லட்சம் நிதி திரட்டினேன்.

    இந்தநிலையில்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் எவரெஸ்ட் மலையேற இருப்பது குறித்த தகவல் விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டிக்கு தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அவர் அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

    அதேவேளையில் தன்னார்வ அமைப்புகள் மூலம் ரூ.15 லட்சம் கிடைக்க உதயநிதி ஸ்டாலின் உதவினார். இதற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையோடு திரும்புவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து மீண்டும் மலையில் இருந்து இறங்குவது என இந்த பயணம் முடிவடைய 2 மாதங்கள் வரை ஆகும் என கூறப்படுகிறது.

    முத்தமிழ்ச்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார்.

    Next Story
    ×