செய்திகள்

லாரி மீது விமானம் மோதல்: லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பரபரப்பு - 8 பேர் காயம்

Published On 2017-05-21 10:49 GMT   |   Update On 2017-05-21 10:50 GMT
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கிய ஜெட் ரக விமானம், லாரி மீது மோதிய விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

மெக்சிகோ நாட்டுக்கு சொந்தமான ஏரோமெக்சிகோ நிறுவனத்தின் போயிங் 737 ரக ஜெட் விமானம் சுமார் 150 பயணிகளுடன் மெக்சிகோ நகரில் இருந்து லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு புறப்பட்டு வந்தது. அமெரிக்க நேரப்படி பிற்பகல் இரண்டரை மணியளவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலைத்தில் தரையிறங்கியது.

ஓடுபாதையை கடந்து பயணிகளை இறக்கிவிடும் ஏணிப்படி வாகனத்தை நோக்கி ஊர்ந்து சென்றபோது விமான நிலையத்துக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் ஒரு லாரி குறுக்கே வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் மீது ஏரோமெக்சிகோ விமானம் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் அந்த லாரி நிலைதடுமாறி, கவிழ்ந்து விழுந்தது, விமானத்தின் வலதுப்புற இறக்கையும் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த இரு பெண்கள் உள்பட எட்டுபேர் காயம் அடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு பிறகு விமானத்தில் இருந்து இறங்கிச் சென்ற பயணிகளில் யாருக்கும் எவ்வித காயமும் இல்லை என கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த விபத்தால் அந்த விமானத்தின் பெட்ரோல் டாங்கி பகுதிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அப்படி நடந்திருந்தால் அதில் இருந்த 150 பயணிகளின் நிலைமை மிகுந்த விபரீதத்துக்குள்ளாகி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News