தமிழ்நாடு

கொரோனா பரவல் அதிகரிப்பு: மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்- சரத்குமார் அறிக்கை

Published On 2022-06-27 05:01 GMT   |   Update On 2022-06-27 06:45 GMT
  • பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது.

சென்னை:

சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகெங்கும் பரவிய கொரோனா தொற்று கடந்த 2019 டிசம்பரில், தமிழகத்தில் பரவத் தொடங்கிய நிலையில், கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசிகள் வாயிலாக கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருந்த சூழலில் தற்போது மீண்டும் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவது வேதனைக்குரியது.

நோய்ப்பரவல் கட்டுக்குள் இருந்த சமயம், மக்கள் அனைவரும் இயல்புநிலைக்கு திரும்பி பொருளாதாரத்தை மீட்டிட தீவிரமாக பணி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் மீண்டும் கொரோனாத் தொற்று வேகமெடுத்து பரவுவது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் கூட, தடுப்பூசி செலுத்துதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்த்தல், சானிடைசர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல் உள்ளிட்ட அரசு வெளியிட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு நோய்த் தொற்று பரவலில் இருந்து தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும் பாதுகாத்து கொள்ள முடியும். எனவே, பொதுமக்கள் கொரோனாவின் தீவிர பரவல் குறித்த முன்னெச்சரிக்கையுடன் சுயபாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News