தமிழ்நாடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனித சங்கிலி திட்டமிட்டபடி நடைபெறும்- திருமாவளவன் அறிவிப்பு

Published On 2022-09-30 03:58 GMT   |   Update On 2022-09-30 03:58 GMT
  • ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும்.
  • நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டையில் மர்மமான முறையில் இறந்த பரமசிவம் வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டபட்டி ஏனாதியில் அம்பேத்கரின் உருவ சிலையை அகற்றியதோடு, விடுதலை சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் நாமக்கல் பூங்கா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அம்பேத்கர் சிலையை வெண்கல சிலையாக தான் வைக்க வேண்டும் என கூறுகின்றனர். இந்த நடைமுறை இந்தியாவில் எங்குமே கிடையாது.

வெளிநாட்டில் புகழ்பெற்ற இடங்களில் அம்பேத்கர் சிலை வைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிலை வைப்பதில் பல்வேறு பிரச்சினை உள்ளன. சேலம் ஏனாதியில் அம்பேத்கர் சிலையை காவல்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். இதில் பொதுமக்களையும், வி.சி.க. கட்சியினரையும் அடித்து துன்புறுத்தப்பட்டனர். வீதிக்கு வீதி விநாயகர் சிலை வைப்பது கலாச்சார விழா என்கிறனர்.

அக்டோபர் 2-ம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சிகளோடு அறிவித்த நிலையில் இதையே காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரணிக்கும் தடை விதித்திருப்பது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த வெற்றி.

சமூக மனித சங்கிலி போராட்டம் அக்டோபர் 2-ல் நடத்தப்படும். அதற்கு உச்சநீதிமன்றத்திலும் டி.ஜி.பி. அலுவலகத்திலும் அனுமதி பெற்று நடத்தப்படும்.

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்தும் 50 இடங்களில், நாங்களும் மனித சங்கிலி நடத்தினால் சட்ட ஒழுங்கு ஏற்படும் என்ற அச்சம் அரசுக்கு இயல்பாக ஏற்படதான் செய்யும். அந்த 50 இடங்களில் அனுமதி மறுத்தால் சரி. நாங்கள் அறிவித்த தமிழ்நாடு தழுவிய போராட்டத்திற்கு ஒட்டு மொத்தமாக தடை விதித்திருப்பது சற்று ஏமாற்றத்தை தருகிறது.

நாங்கள் 500 இடங்களில் மனித சங்கிலி நடத்த அனுமதி கோரி இருந்தோம். ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த இருந்த 50 இடங்கள் போக, மீதமுள்ள இடங்களில் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குனரை கேட்டுக்கொள்கிறோம்.

ஆர்.எஸ்.எஸ். அறிவித்த 50 இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் மனித சங்கிலி நடத்தப்படும். நமது போராட்டம் ரத்து செய்யப்படவில்லை அனைவரும் போராட்டத்திற்கும் தயாராக இருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News