தமிழ்நாடு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்ட படகு உரிமையாளர்களுக்கு இழப்பீடு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

Published On 2022-01-22 01:36 GMT   |   Update On 2022-01-22 01:36 GMT
108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அவர்களது கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்து கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதல்-அமைச்சர், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

குறிப்பாக, இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தினை காக்கும் வகையில், 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும். கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்க பிரதிநிதிகள் முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தினார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு முதல்-அமைச்சர் விளக்கி கூறினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற குழு துணை தலைவர் கனிமொழி எம்.பி., மத்திய வெளியுறவுத்துறை மந்திரியிடம் நேரம் பெற்று தமிழக மீன் வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருடன், மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் படி முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தின் தலைவர் ந.கவுதமன். ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கமிஷனர் டாக்டர் கே.சு.பழனிசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். 
Tags:    

Similar News