செய்திகள்
சென்னை மாநகராட்சியில் நாளை தடுப்பூசி முகாம்கள் இயங்காது
சென்னை மாநகராட்சியில் 45 மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த பின்னர் தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டதால், பல இடங்களில் வாக்குவாதம் ஏற்பட்டது. தடுப்பூசி போட வந்த மக்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி சார்பாக ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 45 தடுப்பூசி மையங்கள் மற்றும் 19 நகர்ப்புற சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தற்போது தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி இருப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் நாளை (ஜூலை 2) இயங்காது; தடுப்பூசி கையிருப்பு வந்தவுடன் மீண்டும் வழக்கம் போல இயங்கத் தொடங்கும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.