என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி"
- கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
- கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகால் அமைக்கப்பட்டது. கடந்த 1883-ம் ஆண்டு சீன செராமிக் கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம் தற்போது ரூ.32.62 கோடியில் அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா மகாலை பொதுமக்கள் பார்ப்பதற்கு தனி இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. முன்பதிவு செய்து பொதுமக்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு ஸ்லாட் இருக்கும் வகையில் 60 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வருவோரும் மகாலை பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. கியூ.ஆர்.கோடு மூலம் பெயர் பதிவு செய்யும் வசதி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கி அனுமதிக்கப்படுகின்றனர்.
கடந்த டிசம்பர் 27-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 25 ஆயிரம் பேர் விக்டோரியா பொது அரங்கை பார்வையிட்டுள்ளனர்.
தற்போது பொதுமக்கள் காத்திருந்து பார்க்கக்கூடிய சூழல் நிலவி வருவதால் காத்திருப்பு அறை புதிதாக கட்டப்பட்டுள்ளது. மழை, வெயில் பாதிப்பு இல்லாமல் பார்வையாளர்கள் அரங்கிற்கு செல்வதற்கு முன்னதாக குளு குளு வசதியுடன் கூடிய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். இந்த நவீன காத்திருப்போர் அறை 4 அமைக்கப்பட்டு இருப்பதால் அங்கு வரக்கூடிய பார்வையாளர்கள் அதில் சிறிது நேரம் தங்க வைக்கப்படுகின்றனர். ஒரு அறையில் 20 பேர் வரை அமரலாம். இந்த வசதியை பொதுமக்கள் வரவேற்று இருப்பதோடு வெயில் மற்றும் மழையில் இருந்து விலகி பாதுகாப்பாக காத்திருந்து செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக பாராட்டுகின்றனர்.
- கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
- விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னையில் சமீப காலமாகவே கொசுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழை காலங்களில் தான் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அதனால் பொதுமக்கள் இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் நிகழ்வுகள் அரங்கேறும். ஆனால் இப்போதெல்லாம் கோடை காலத்தில் கூட கொசுக்கடிக்கு பஞ்சமில்லை. மழைக்காலம், குளிர்காலம், கோடை காலம் என எல்லா பருவ காலத்திலுமே சென்னையில் கொசுக்களின் தொல்லை அதிகரித்தே வருகிறது.
அதிலும் வடகிழக்கு பருவமழைக்கு பிறகு சென்னையில் கொசுக்களின் ஆதிக்கம் மிகவும் அதிகரித்து விட்டது. புற்றீசல் போல பல்கிப் பெருகிய கொசுக்கள் காரணமாக சென்னை மக்கள் பெரும்பாலானோர் இரவு தூக்கத்தை தொலைப்பது தினமும் அரங்கேறி வருகிறது. இரவு 7 மணிக்கு மேல் பொது வெளியில் சாலையோரம் சிறிது நேரம் நின்றாலே கொசுக்கள் மொத்தமாக மொய்த்துக்கொண்டு கடிக்கின்றன.
இதுவரை இல்லாத வகையில் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து இருப்பதால் பொதுமக்கள் தாங்க முடியாத சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்க மாநகராட்சி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். வாகனங்களில் கொசுமருந்து புகை அடிப்பது பெயரளவுக்கு மட்டுமே நடப்பதாகவும், அதனால் கொசுக்கள் ஒழியவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
கொசுக்கடியில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் தாங்கள் சுயமாக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். கொசுவர்த்தி ஏற்றினாலும், கிரீம் பயன்படுத்தினாலும் அவற்றுக்கு கொசுக்கள் சீக்கிரமே பழகி விடுவதாகவும், அதனால் நிரந்தர பலனில்லை என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலானோருக்கு அலர்ஜி பாதிப்பு இருப்பதால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்கும் ஸ்பிரே உள்ளிட்டவற்றையும் பயன்படுத்த முடிவதில்லை. இதனால் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் பொதுமக்கள் தவிக்கிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பால் பொதுமக்களுக்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கொசுக்களை ஒழிப்பதற்காக நூதன முயற்சி ஒன்றை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் புதிதாக கையாண்டு வருகிறார்கள். மழைநீர் வடிகால்களுக்கு கொசுவலை போர்த்தும் திட்டம் தான் அது. முதல் கட்டமாக திருவொற்றியூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது.
சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை வடிகால்வாயில் விழச் செய்வதற்காக ஆங்காங்கே சிறிய அளவிலான தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மூடியை திறந்து கொசுவலை போர்த்தி, அதன் மேல் மீண்டும் மூடி வைக்கப்படுகிறது. மழைநீர் வடிகால்வாய் தொட்டிக்குள் உள்ள கொசுக்கள் தொட்டி மூடியில் உள்ள துளை வழியே வெளியேறுவதை தடுக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் இந்த முயற்சியானது பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறார்கள்.
இது தொடர்பான விமர்சனங்களும், கேலி-கிண்டல் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த கொசுவலை முயற்சியால் உண்மையிலேயே பயன் இருக்குமா என்கிற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தெர்மாக்கோல் மிகவும் பிரபலமானதை யாரும் மறந்துவிட முடியாது. வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் இருக்க அப்போது அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூ அணை நீரின் மேற்பரப்பில் தெர்மாகோலை மிதக்கவிட்டார். ஆனால் தண்ணீரில் ஏற்பட்ட அலையால் அனைத்து தெர்மாக்கோல்களும் சில நிமிடங்களிலேயே கரை ஒதுங்கின. அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த தெர்மாக்கோல் முயற்சியுடன், இந்த கொசுவலை முயற்சியை தொடர்புபடுத்தி 'அன்று தெர்மாக்கோல் இன்று கொசுவலை' என்று பலரும் இப்போது நகைச்சுவையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த விமர்சனங்கள் வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது.
'கொசுவை பிடிக்க வலைவிரிக்கும் சென்னை மாநகராட்சி... வாகன ஓட்டிகளே உஷார்!', கொசு வலைகளை கரையான் அரிக்காமல் இருக்க பூச்சி மருந்து தெளிக்கப்படுமா?, 'கொசு உற்பத்தியை தடுக்க புதிய வழி... நீங்க ஒரு சிட்டி விஞ்ஞானி!', 'தெர்மாக்கோல் சம்பவமே இதைவிட பரவாயில்லை போல!', 'மதுரைக்கு தெர்மாக்கோல்,,, சென்னைக்கு கொசுவலை...' என்று நகைச்சுவையாக பதிவிட்டு வருகிறார்கள்.
திரைப்படத்தில் வரும் 'என் கட்சிக்கு மட்டும் நிதி நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பிரமாண்டமான கொசுவலையை வாங்கி தொகுதி முழுவதும் பந்தல் போட்டு மூடி இருப்பேன்... என்னால் முடியவில்லையே...' என்று நடிகர் வடிவேல் பேசும் சினிமா டயலாக்கையும் பதிவிட்டு வருகிறார்கள்.
கவுண்டமணி, செந்தில் காமெடியில் செந்தில், கவுண்டமணியிடம், செந்தில் கேள்வி எழுப்புகிற 'மீனுக்கு வலை போட்டா வலைக்குள்ள என்ன இருக்கும்? மீன் இருக்கும். மானுக்கு வலை போட்டா வலைக்குள் என்ன இருக்கும்? மான் இருக்கும். கொசுவுக்கு வலைபோட்டா வலைக்குள் என்ன இருக்கும்? என்ற காமெடியையும் பதிவிட்டுள்ளனர்.
எது எப்படியோ சென்னையில் கொசு ஒழிந்தால் போதும்... அதுதான் பொதுமக்களின் விருப்பம்.
- இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
- சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன.
சென்னையில் காற்றின் தரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்வதற்காக 100 முக்கிய இடங்களில் டிஜிட்டல் பலகைகளை அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் ரூ.6.36 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, மாநகராட்சி தலைமையகமான ரிப்பன் மாளிகை நுழைவு வாயிலில் ஒரு டிஜிட்டல் பலகை சோதனை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. நகரின் மற்ற 100 இடங்களிலும் இந்தப் பலகைகளைப் பொருத்தும் பணிகள் 2026 பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் 15 மண்டலங்களிலும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்தப் பலகைகள் நிறுவப்பட உள்ளன. இதில் காற்றின் தரம், பி.எம் 2.5, பி.எம் 10, நச்சு வாயுக்களின் அளவு, காற்றின் வேகம், வெப்பநிலை மற்றும் மழை அளவு உள்ளிட்ட 19 வகையான தரவுகள் காட்சிப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் இயக்கப்படுகிறது. அதாவது, இந்தத் திரைகள் தினமும் 15 மணிநேரம் செயல்படும். இதில் இரண்டு மணிநேரம் அரசு அறிவிப்புகள் மற்றும் காற்றின் தர விவரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது; மீதமுள்ள 13 மணிநேரம் வருவாயை ஈட்டுவதற்காக வணிக ரீதியான விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்படும்.
- இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்
- பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த பெருங்குடி குப்பைக் கிடங்கு, தற்போது பசுமை நிறைந்த Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.
'பயோ-மைனிங்' தொழில்நுட்பம் மூலம் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த நிலம் Eco பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது
இந்த மாற்றத்தைப் பாராட்டி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், பல தசாப்தங்களாகக் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடந்த பெருங்குடி கிடங்கு, சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியால் தற்போது மரங்கள் மற்றும் நடைபாதைகள் கொண்ட அழகிய பூங்காவாக உருமாறியுள்ளது.
இதைச் சாதித்துக் காட்டிய சென்னை மாநகராட்சிக்கு எனது பாராட்டுகள். இது போன்ற மாற்றங்கள் மற்ற நகரங்களுக்கும் ஒரு சிறந்த உத்வேகம் ஆகும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா பதிவுக்கு முதலைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அதில், நன்றி திரு. ஆனந்த் மஹிந்திரா.. சென்னை மாநகராட்சி, மொத்தம் 90 லட்சம் மெட்ரிக் டன் பழமையான குப்பைகளில் இருந்து, பயோ மைனிங் முறை மூலம் கிட்டத்தட்ட 50 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றியுள்ளது.
மீதமுள்ள குப்பைகளை பிப்ரவரி 2027-க்குள் அகற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தற்போது, குப்பைகளை நிலத்தில் கொட்டுவதை முற்றிலுமாகத் தவிர்ப்பதிலும், திறமையான கழிவு மேலாண்மையை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி, அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த திடக்கழிவு மேலாண்மைத் தீர்வுகளைச் செயல்படுத்தி வருகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
- நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
- தூய்மையான கடற்கரை அனைவரின் பொறுப்பு எனவும் தெரிவிப்பு
மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சென்னி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தியில், "சென்னையின் பெருமையாகவும், சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகை தரும் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கும் மெரினா கடற்கரை, சென்னை மாநகரின் அடையாளமாகத் திகழ்கிறது. மெரினா கடற்கரையை சர்வதேசதரத்தில் மேம்படுத்தி பாதுகாத்திட பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மெரினா கடற்கரையை தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும். திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 (Solid Waste Management Rules, 2016)ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக்கழிவுகள், உணவுப் பொருள் எச்சங்கள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பாக, மெரினா கடற்கரையின் தூய்மையை உறுதி செய்வதற்காக Chennai Enviro Solutions Pvt. Ltd (SPV) என்ற தனியார் நிறுவனம் மூலம் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்யும் 7 இயந்திரங்கள் (Beach Cleaning Machines) மற்றும் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 274 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதிகளிலிருந்து மட்டும் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றது.
மேலும், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் நாள்தோறும் சுழற்சி முறைகளில் மொத்தம் 53 தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இத்தனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், பொதுமக்களின் போதியஒத்துழைப்பு இல்லாத காரணத்தினால், கடற்கரையில் பல இடங்களில் குப்பைகள் மற்றும் உணவுக்கழிவுகள் காணப்படுவதால் அழகற்றதாகவும், சுகாதார குறைபாடுகளை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. குறிப்பாக, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகளை போடாமல், திறந்த வெளிகளில் வீசப்படுகிறது.
இதன் காரணமாக சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையின் அழகும், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதோடு, உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே சென்னை நகரின் நற்பெயருக்கும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளுக்கு பெருமளவில் பொது மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையின் போது, அனைவரும் பொறுப்புனர்வோடு குப்பை கழிவுகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மை பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதனை மீறி சென்னையில் அமைந்துள்ள மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரையில் குப்பை கொட்டுபவர்கள் மீது உரிய சட்ட விதிகளின் படி ரூ.5,000/– அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதும் இதன்மூலம் கடுமையாக எச்சரிக்கப்படுகிறது. தூய்மையான கடற்கரை – சுகாதாரமான சென்னை – அனைவரின் பொறுப்பு" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.
அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12-ந்தேதி முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம்.
மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சமும், மரக்கிளை களை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.
எனவே சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலி மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட வேண்டும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள்.
வீடு சுத்தமாக இருந்தால் தெரு நன்றாக இருக்கும். தெரு சுத்தமாக இருந்தால் நகரம் நன்றாக இருக்கும். நகரம் நன்றாக இருந்தால் மாவட்டம் நன்றாக இருக்கும். மாவட்டம் நன்றாக இருந்தால் மாநிலம் நன்றாக இருக்கும். மாநிலம் நன்றாக இருந்தால் நாடே நன்றாக இருக்கும் என்பார்கள்... இதற்கு பொருள்...
வீடு சுத்தமாக இருப்பது என்பது தனிமனிதனின் ஒழுக்கத்தையும், பொறுப்புணர்வையும் குறிக்கிறது, இது ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. வீடுகளின் தூய்மை தெருக்களின் தூய்மையைத் தீர்மானிக்கிறது. இது குடிமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்கும் கூட்டுப் பொறுப்பை உணர்த்துகிறது.
சுத்தமான தெருக்கள், சுத்தமான நகரங்களுக்கு வழிவகுக்கும். இது நகர்ப்புற மேம்பாடு, சுற்றுலா, மற்றும் பொது சுகாதாரத்திற்கு உதவுகிறது. மாவட்டங்கள் சீராக இருந்தால் மாநிலங்கள் வலுப்பெறும்; மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளமிடும் என்பதாகும்.
இதற்கெல்லாம் முழு முதற்காரணமானவர்கள் தூய்மை பணியாளர்கள். இவர்கள் குறித்து நாம் எப்போது பேசுகிறோம்... வெள்ளம் வந்தால் தெருக்களை சுத்தம் செய்ய இரவு, பகல் பாராமல் பணியாற்றும் போது. பிறகு போராட்டம் என்ற பெயரில் சாலைகளில் போட்டு செல்லும் குப்பைகளை சுத்தம் செய்யும் போது. பிறகு குப்பைகளில் தவறவிட்ட நகைகளை மீட்டு தரும் போது அவர்களை பாராட்டுகிறோம். அவ்வளவுதான்..
நம் வீட்டில் சேரும் மீதமான உணவு, குப்பைகளின் நாற்றத்தை கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மேலும் குப்பை வண்டிகள் செல்லும் போது ஏற்படும் துர்நாற்றத்தை கூட சகித்துக்கொள்ள முடியவில்லை. இப்படியிருக்க.. இதை எதை பற்றியும் கவலைப்படாமல் தெரு, சாலைகளை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களை தெய்வத்திற்கு நிகர் என்றால் மிகையல்ல...

இப்படியான தூய்மை பணியாளர்கள் 120 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுகுறித்து யாரும் கவலைப்படவும் இல்லை. சிந்திக்கவும் இல்லை. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியவர்கள்
1 குறைந்தபட்ச தினசரி ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
2 பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
3 மாநகராட்சிகளில் நேரடியாகப் பணியாற்றுபவர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் இடையிலான ஊதிய வேறுபாட்டைக் களைய வேண்டும்.
4 தரமான கையுறைகள், முகக்கவசங்கள் மற்றும் காலணிகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை முறையாக வழங்க வேண்டும்.
5 என்.எம்.ஆர் (NMR) முறையில் பணியாற்றியவர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
என்பன முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு தொடங்கிய போராட்டமானது உண்ணாவிரதம், காலவரையற்ற போராட்டம், கடலில் இறங்கி போராட்டம் என பல்வேறு முறைகளில் போராட்டம் நடத்தி கைதானார்கள். சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது.

இதனிடையே தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து அரசு பரிசீலனையும் செய்தது. அதில், ஊதிய உயர்வு, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளிலும் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் இலவச உணவு உள்ளிட்ட சில புதிய திட்டங்களை அறிவித்தது, ஆனால் போராட்டக்காரர்கள் இவை போதுமானதல்ல எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரையில் தூய்மைப் பணியாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு வருடமும் தீர்க்கப்படாத பிரச்சனையா தொடர்ந்து வரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
- பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும்.
சென்னையில் நாய்க்கடி சம்பவங்களைத் தொடர்ந்து, வளர்ப்பு நாய்களுக்கும், விலங்குகளுக்கும் உரிமம் பெறுவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் செல்லப்பிராணிகள் வளர்ப்பினை முறைப்படுத்த கடந்த 2023-ம்ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக செல்லப்பிராணி உரிமம் பெறும் முறை நடைமுறையில் உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தினை கட்டுப்படுத்திடும் வகையில் அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சையினையும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் வழங்குதல் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட விவரங்களை தொடர்ந்து கண்காணித்தல் நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த மேலாண்மைக்காக மேம்படுத்தப்பட்ட பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதள சேவையினை மேயர் ஆர்.பிரியா அக்.3-ந்தேதி தொடங்கி வைத்தார்.
செல்லப் பிராணிகளின் உரிமையாளர் தங்களின் புகைப்படம், முகவரிச் சான்று, செல்லப்பிராணி புகைப்படம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 உரிமக் கட்டணமாகச் செலுத்தி உரிமம் பெறலாம்.
செல்லப்பிராணிக்களுக்கான உரிமம் பெறும் நடைமுறையை மேலும் விரைவுபடுத்தவும், இதன்மூலம் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் எளிதாக தங்கள் செல்லப்பிராணிகளுக்கான உரிமத்தை பெற்றுக்கொள்வதற்காகவும் இந்தியாவிலேயே முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் மைக்ரோசிப் செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட இணையதள சேவை (www.chennaicorporation.gov.in-ல் Pet Animal Licence) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்தது.
செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
செல்ல பிராணிகளான நாய், பூனைகளுக்கு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். இதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உரிமம் பெற தவறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மாநகராட்சி ஊழியர்கள் இதை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள். மேலும் பூங்காக்கள் நடைபாதைகள் பிற பகுதிகளில் கழுத்துப் பட்டை இல்லாமல் நாய்களை அழைத்து வந்தால் உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிட்புல், ராட்வீலர் இன நாய்களுக்கு புதிதாக உரிமம் வழங்குவதை நிறுத்தவும், ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள் செல்லப்பிராணியை வெளியே அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயம். இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மேற்கண்ட 2 நாய்களின் ஆண்டு உரிமத்தை புதுப்பிக்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் இல்லாமல் பிட்புல், ராட்வீலர் நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளுக்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடு விதித்ததையடுத்து அதன் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் தங்களது செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற்று வருகின்றனர்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உரிமம் பெற பதிவு செய்துள்ளனர். இதில், 57 ஆயிரம் பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிட்புல், ராட்வீலர் இன வளர்ப்பு நாய்களை புதிதாக வாங்கி வளர்க்க தடை விதித்து சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாளை முதல் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க செல்லப்பிராணிகளின் உரிமம் பெற விண்ணப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உரிமம் இன்றி சட்டவிரோதமாக பிட்புல், ராட்வீலர் நாய்களை வாங்கி வளர்ப்போருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கனவே உரிமம் பெற்ற பிட்புல், ராட்வீலர் நாய்களை வெளியில் அழைத்து செல்லும்போது கழுத்துப்பட்டை, வாய்க்கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றாத உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு
- உரிமையாளர்களின் வசதிக்காக, மைக்ரோசிப் பொருத்துதல், தடுப்பூசி செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாகவே வழங்கப்படுகின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சி, செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் காலக்கெடுவை டிசம்பர் 14, 2025 வரை நீட்டித்துள்ளது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் பெறுவதற்கான காலக்கெடு முதலில் நவம்பர் 23, 2025 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் டிசம்பர் 7, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது, பெய்து வரும் தொடர் மழை மற்றும் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் திரு.வி.க. நகர், புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம்மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய 6 செல்லப்பிராணிகள் சிகிச்சை மையங்களிலும், சோழிங்கநல்லூர் நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல், வெறிநாய்க்கடி நோய்த்தடுப்பூசி (Anti Rabies Vaccination) செலுத்துதல், உரிமம் வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வாரத்தின் அனைத்து நாட்களிலும் தினசரி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
எனவே செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் இதனைப் பயன்படுத்தி 14.12.2025க்குள் தங்களின் செல்லப் பிராணிகளுக்கான உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொண்டு அபராதம் செலுத்துவதைத் தவிர்த்திடுமாறு சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியில் இது நாள் வரை 91,711 செல்லப்பிராணிகள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, 45,916 செல்லப் பிராணிகளுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
- இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.
சென்னை:
சென்னையில் 3-வது நாளாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஒரு சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மழை பாதிப்பால் இதுவரையில் முகாம்களில் யாரும் தங்க வைக்கப்படவில்லை. உணவு மட்டும் வினியோகிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 32 ஆயிரத்து 500 சிற்றுண்டியும் நேற்று மதியம் 91 ஆயிரத்து 600 பேருக்கு உணவும் தயாரித்து வழங்கப்பட்டன.
நேற்றிரவு ஒரு லட்சத்து 54 ஆயிரம் பாக்கெட் இரவு உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. இன்று காலையில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 500 உணவு பொட்டலம் தயாரித்து வழங்கப்பட்டன.
மாநகராட்சி சமையல் கூடங்களில் சுகாதாரமாக உணவு தயாரிக்கப்பட்டு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு 5 லட்சத்து 1,600 உணவு பொட்டலங்கள் இதுவரையில் வழங்கப்பட்டன.
- வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தல்.
டிட்வா புயல் முன்னெச்சரிக்கையாக பொது மக்கள் புயல் மழை வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதில், டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம், மேலும் மரங்களின் கீழ் நிற்க வேண்டாம்.
பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.






