செய்திகள்
ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி சிவா-பிரியா.

ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

Published On 2021-04-18 15:20 GMT   |   Update On 2021-04-18 15:20 GMT
காதல் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் மாக்கனூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகன் சிவா (வயது 27). சேலம் மாவட்டம் வாழப்பாடி ரங்கனூர் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகனும், சிவாவும் கோவையில் ஒரே இடத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் இருவரும் நண்பர்களாகப் பழகினர். சிவா, தனது நண்பருடன் அடிக்கடி வாழப்பாடிக்குச் சென்று வந்துள்ளார்.

அப்போது நண்பனின் தங்கையான பிரியா (வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். அவர்களின் காதல் விவகாரம் வெளியே தெரிய வந்ததால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரியாவும், சிவாவும் வீட்டை விட்டு வெளியேறி, அச்சமங்கலம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

இதுகுறித்து பிரியாவின் தந்தை ராஜா வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாவை தேடி வந்தனர். நேற்று ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.

ஜோலார்பேட்டை போலீசார், வாழப்பாடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வாழப்பாடி போலீசார், இரு தரப்பு பெற்றோரை வரவழைத்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இருவரும் மேஜர் என்பதாலும், காதல் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததாலும் பிரியாவை காதல் கணவர் சிவாவுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News