செய்திகள்
சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்

சூறைக்காற்றுடன் மழை: ஏரியூர் பகுதியில் 100 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதம்

Published On 2021-02-22 07:00 GMT   |   Update On 2021-02-22 07:00 GMT
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் சூறைக்காற்றில் சுமார் 100 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதமானதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் நேற்று முன்தினம் மழை பெய்தது. அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

ஏரியூரை சுற்றியுள்ள மலையனூர், புது நாகமரை, பெல்லூர், ராமகொண்ட அள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சூறைகாற்றுடன் நேற்று மழை பெய்தது. இதனால் இந்த பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த சுமார் 100 ஏக்கர் வாழைகள் முறிந்து சேதமானது.

மேலும் பல்வேறு இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. மரக்கிளைகள் முறிந்தும், விளம்பர தட்டிகள் காற்றில் பறந்தும் சாலையில் விழுந்தன. சூறை காற்றுடன் மழை பெய்ததால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.

இந்த நிலையில் சூறைக்காற்றில் வாழைகள் முறிந்து சேதமானதால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சேதமான வாழைகளை வேளாண் அதிகாரிகள் கணக்கெடுத்து உரிய இழப்பீடு அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News