செய்திகள்
வாடிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு கிராம மக்கள் நேற்று இரவு சாலை மறியல் செய்த போது எடுத்த படம்.

வாடிப்பட்டி அருகே மினி பஸ் மோதி தாய்-மகன் பலி: கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2020-12-05 01:14 GMT   |   Update On 2020-12-05 01:14 GMT
வாடிப்பட்டி அருகே மினி பஸ் மோதியதில் தாய்-மகன் பரிதாபமாக இறந்தனர்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செம்மினிபட்டியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ராணி(வயது 31). இவர்களுக்கு முத்துகிருஷ்ணன்(3), ராமகிருஷ்ணன்(1) என்ற மகன்கள் உள்ளனர். நேற்று இரவு 4 பேரும் செம்மினிப்பட்டியில் இருந்து வாடிப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அந்த மோட்டார் சைக்கிள் செம்மினிபட்டி காமராஜர் காலனி முன்பாக வந்த போது வாடிப்பட்டியில் இருந்து பூச்சப்பட்டிக்கு சென்ற மினி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராணியும், ராமகிருஷ்ணனும் இறந்தனர்.

இந்த விபத்தை கண்ட கிராம மக்கள் பஸ் டிரைவரை கைது செய்ய கோரி வாடிப்பட்டி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதைதொடர்ந்து சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆனந்த ஆரோக்கியராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைதொடர்ந்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதன் பின்னர் பஸ் டிரைவர் தாதம்பட்டியை சேர்ந்த குமரேசன் என்பவரை கைது செய்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த சீனிவாசன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
Tags:    

Similar News