செய்திகள்
மோகன்தாஸ்-சுமதி தம்பதி(பழைய படம்)

திருச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை

Published On 2020-11-16 13:12 GMT   |   Update On 2020-11-16 13:12 GMT
திருச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
கே.கே.நகர்:

திருச்சியில் மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சிம்கோ காலனியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 70). இவருடைய மனைவி சுமதி(65). இவர்களுடைய மகன் பாலாஜி(39). அதே வீட்டின் மேல் மாடியில் குடியிருந்து வருகிறார். கடந்த 20 வருடங்களாக சுமதிக்கு மார்பக புற்றுநோய் இருந்து வந்தது.

இந்த நிலையில் சுமதி நேற்று முன்தினம் இரவு உடல்நிலை மோசமாகி இறந்து விட்டார். மனைவி இறந்த துக்கத்தில் மோகன்தாஸ் மனமுடைந்தார். இதைத்தொடர்ந்து எனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று கடிதம் எழுதிய வைத்த அவா், வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நேற்று காலை வெகு நேரமாகியும் தனது பெற்றோர் வசிக்கும் வீட்டின் கதவு திறக்கப்படாததால் அவருடைய மகன் பாலாஜிக்கு சந்தேகம் வந்தது. உடனே அவர் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்த போது, தனது தந்தை தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுபற்றி எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது, சுமதியும் இறந்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவருடைய உடலையும் கைப்பற்றி பிரேத பாிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த சோகத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News