செய்திகள்
மரணம்

பழனி அருகே கொரோனா சிகிச்சைக்கு வர மறுத்த வாலிபர் பலி

Published On 2020-09-08 07:44 GMT   |   Update On 2020-09-08 07:44 GMT
பழனி அருகே கொரோனா சிகிச்சைக்கு வர மறுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் உயிரிழந்தார்.
பழனி:

பழனி அருகே உள்ள கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் வாரிய பணியாளர் தனது 40 வயது மகனுடன் வசித்து வந்தார். கோவையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 40 வயது வாலிபருக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் தனிமையில் இருக்குமாறு சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.

ஆனால் தொற்று பாதித்தவரும், அவரது குடும்பத்தினரும் இது குறித்து வெளியில் யாரிடமும் சொல்லாமல் அக்கம் பக்கத்தில் நெருங்கி பழகி வந்ததுடன் அடிக்கடி வெளியில் சென்று வந்தனர்.

இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பாதித்த அந்த வாலிபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு வர மறுத்து தனது கழுத்தில் கத்தியை வைத்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார்.

இதனையடுத்து சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அவர்களுக்கு அறிவுரை வழங்கி வீட்டுக்குள்ளேயே தனிமையில் இருந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர். இதனையடுத்து அவரது வீடு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த வாலிபர் திடீரென உயிரிழந்தார். இது குறித்து பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடலை எடுத்துச் சென்று சுகாதாரத்துறையினர் அடக்கம் செய்தனர். மருத்துவத்துறையினர் சிகிச்சைக்கு அழைத்த போதே வந்திருந்தால் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் என அப்பகுதி மக்கள் மற்றும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
Tags:    

Similar News