செய்திகள்
வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
வடிகால் வாய்க்கால் அமைக்கக்கோரி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குப்பம் கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தெருவிலேயே வழிந்தோடுகிறது. இவ்வாறு வழிந்தோடும் கழிவுநீரில் நாய்கள், பன்றிகள் மேய்ந்து சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதால் பொதுமக்களுக்கு பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வடிகால் வாய்க்கால் வசதி அமைக்க வேண்டும் என்று காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இருப்பினும் இதுநாள் வரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு சென்று அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கழிவுநீர் செல்ல வசதியாக வடிகால் வாய்க்கால் வசதியை அமைத்து தரக்கோரி கோஷம் எழுப்பினர். உடனே அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வடிகால் வாய்க்கால் வசதி அமைக்க விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன் பிறகு பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.