செய்திகள்
மணமக்கள்

இ-பாஸ் கிடைக்காததால் தமிழக-கேரள எல்லையில் நடந்த திருமணம்

Published On 2020-07-02 07:53 GMT   |   Update On 2020-07-02 07:53 GMT
இ-பாஸ் கிடைக்காததால் தமிழக-கேரள எல்லையில் மணமக்களுக்கு திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் இரு வீட்டார் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தென்காசி:

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வினோத்-சுலேகா ஆகியோரின் மகன் நிகில் (வயது 27). இவருக்கும் நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணியன்- ராதிகா ஆகியோரின் மகள் ஜோதிகா (20) என்பவருக்கும் பெற்றோர்களால் பேசி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அன்று திருமணம் நடைபெறவில்லை.

இதன்பிறகு திருமணம் ஜூன் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போதும் ஊரடங்கு அமலில் இருந்ததால், எந்தவித தளர்வுகளும் இல்லை. மேலும் மணமகனுக்கும் அவரது வீட்டாருக்கும் தமிழகத்திற்கு வருவதற்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேற்று திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி தமிழகத்தில் இருந்து பெண்வீட்டார் கேரளாவிற்கு செல்ல இ-பாஸ் விண்ணப்பித்தனர். அதில் மணமகளுக்கு மட்டும் கேரள அரசு அனுமதி அளித்தது.

தமிழகம் வருவதற்கு மணமகன் வீட்டாருக்கு இ-பாஸ் கிடைக்கவில்லை. எனவே திருச்சூரில் இருந்து மணமகன், அவரது பெற்றோர் தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச்சாவடி பகுதிக்கு வந்தனர். நெல்லையில் இருந்து மணமகள் தனது பெற்றோருடன் சோதனை சாவடிக்கு சென்றனர். சோதனை சாவடி அருகில் ஆரியங்காவு அய்யப்பன் கோவில் உள்ளது. அதன் வாசலில் சாலையில் நின்று மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார். இந்த திருமணத்தில் இரு வீட்டார் உள்பட மொத்தம் 7 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News