அவினாசியில் கிரிக்கெட் தகராறில் பெண்ணை அடித்து கொன்ற 4 வாலிபர்கள் கைது
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி சின்னேரி பாளையம் ஊராட்சி கணேசபுரம் பகுதியை சேர்ந்த வாலிபர்களும், மடத்துப்பாளையம் வினோபா வீதியை சேர்ந்த வாலிபர்களும் அங்குள்ள செம்பாண்டம் பாளையத்தில் உள்ள மைதானத்தில் நேற்று மதியம் கிரிக்கெட் விளையாடினர்.
அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் கணேசபுரத்தை சேர்ந்த ஜீவா (வயது 19) காயம் அடைந்தார். ஜீவாவின் தந்தை பழனிசாமி, தாய் கொண்டாள் (35) ஆகியோர் மகனை தாக்கியது குறித்து கேட்டனர். அப்போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த 4 வாலிபர்கள் வீட்டின் ஓட்டை எடுத்து கொண்டாள், பழனிசாமி மற்றும் அவர்களது மகன்கள் சிவா, ஜீவா ஆகியோரை தாக்கினர். இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே கொண்டாள் பரிதாபமாக இறந்தார்.மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், ராஜா, வரதன், தமிழ்செல்வன்ஆகிய 4 வாலிபர்களை கைது செய்தனர்.