செய்திகள்
ஜிகே வாசன்

ஊரடங்கை மக்கள் கடைபிடிக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

Published On 2020-05-04 07:28 GMT   |   Update On 2020-05-04 07:28 GMT
கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவித்தாலும் தேவையை உணர்ந்து ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசு ஊரடங்கை மே 17-ந்தேதி வரை நீட்டித்து தளர்வு, கட்டுப்பாடுகள் விதித்திருப்பது கடைகள் திறக்கவும், தொழில்கள் தொடங்கவும் வழி வகுத்தாலும் இவையெல்லாம் குறிப்பிட்ட துறையைச் சார்ந்தவர்களுக்கும், அவசர, அவசியத்தேவைக்காக வெளியில் செல்லும் மக்களுக்கு மட்டும் தான் என்பதை பொது மக்கள் கவனத்தில் கொண்டு ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும்

தளர்வும், கட்டுப்பாடுகளும் எதற்காக என்றால் நோயைக் கட்டுப்படுத்த மட்டுமல்ல தொழில்கள் முடங்கிவிடக்கூடாது,, பொருளாதார ரீதியாக முடக்கத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குறிப்பாக அனைத்து துறையையும் இயக்க முடியுமா, சிறு குறு நடுத்தர தொழில் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா, மக்கள் வாழ்வாதாரத்தை தொடரலாமா, வருமானம் ஈட்ட வாய்ப்பிருக்கிறதா போன்றவற்றையெல்லாம் பொருளாதார வல்லுநர்கள், பல்வேறு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் போன்றோருடன் ஆலோசனை செய்த பிறகே ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வு, கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

எனவே பாதுகாப்பாக தொழிலைத் தொடங்கவும், மக்களுக்கு வருமானம் கிடைக்கவும், பொருளாதாரத்தை உயர்த்தவும் புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கை மேலும் நீட்டித்திருப்பது வரவேற்கத்தக்கது.

எனவே நீட்டிக்கப்பட்டிருக்கிற ஊரடங்கை மக்கள் தடையென்று நினைக்காமல் மக்களின் வருங்கால நல்வாழ்விற்கான, முன்னேற்றத்திற்கான இடைவெளி என்று நினைத்து செயல்பட்டால், நிச்சயமாக இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

மேலும் கொரோனா என்ற கொடிய நோயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் மக்கள் அடைந்துள்ள சிரமத்தை தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும், நாட்டிற்காகவும் தாங்கிக்கொண்டு மீண்டும் நாட்டின் பொருளாதாரம் வளம் பெற அடித்தளமாக செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News