திருவாரூரில் முக கவசத்துடன் மாலை மாற்றி திருமணம் செய்த மணமக்கள்
திருவாரூர்:
கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் எதிரொலித்து வருகிறது. உறவினர்கள், நண்பர்கள் படைசூழ கோலாகலமாக நடைபெற்று வந்த திருமணங்களின் நடைமுறையையே கொரோனா மாற்றி உள்ளது. கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் இன்று திருமணங்கள் உறவினர்கள் கூட்டமின்றி எளிமையாக நடத்தப்பட்டு வருகின்றன.
திருவாரூரில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் திருவாரூர் நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த தங்கமாரியப்பன் என்பவருடைய மகள் செல்வமகேஸ்வரி, சென்னையை சேர்ந்த கணேசன் மகன் தீபன்குமார் ஆகியோருக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்தபடி நேற்று காலை திருவாரூரில் உள்ள பெண் வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
மக்கள் கூட்டமாக கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் இந்த திருமண விழாவில் மணமக்களின் உறவினர்கள் 8 பேர் மட்டுமே பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
மணமக்கள் இருவரும் முக கவசத்துடன் மாலை மாற்றிக் கொண்டனர். அதேபோல உறவினர்களும் முக கவசம் அணிந்து இருந்தனர்.