சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 28 டன் ரேஷன் அரிசி கடத்தல்- 3 பேர் கைது
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சோழவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் காவல் உதவி மையம் அருகே நேற்று நள்ளிரவு சப் இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது செங்குன்றத்தை அடுத்த அலமாதியில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரியை சோதனை செய்தனர். அதில் 28 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து லாரியில் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் காசிரெட்டி, ரத்தினம், செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த பரமகுரு ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஆந்திராவுக்கு கடத்திச் சென்று அங்கு பாலிஷ் செய்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதுகுறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார். ரேசன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.