செய்திகள்
அமைச்சர் உதயகுமார்

தேர்தலில் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரை நாடும் திமுக- அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

Published On 2020-02-05 09:45 GMT   |   Update On 2020-02-05 09:45 GMT
பொதுமக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல் தேர்தலில் வெற்றி பெற தி.மு.க. பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை:

ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாளையொட்டி திருமங்கலம் அருகே உள்ள உரப்பனூரில் அன்னதான நிகழ்ச்சியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது. இது தி.மு.க. தனது தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு சமமாகும். மக்களுடைய உணர்வுகளை, எண்ணங்களை, எதிர் பார்ப்புகளை உணர்ந்து கொள்ளாமல் தி.மு.க. தேர்தல் வெற்றிக்காக பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அவரால் வெற்றியை தேடித்தர முடியாது. தமிழக மக்கள் உணர்வு மிக்கவர்கள், ஒருமித்து எண்ணங்களை பிரதிபலிக்கக் கூடியவர்கள்.

அ.தி.மு.க. ஆட்சியை முதல்வர், துணை- முதல்வரும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றரை கோடி தொண்டர்களின் அயராத உழைப்பால் மீண்டும் மக்கள் மகத்தான தீர்ப்பை அ.தி.மு.க.வுக்கு தருவார்கள்.

இணையதள வசதி நாடு முழுவதும் உள்ளது. அதிவேகத்துடன் கூடிய இணைய தள வசதியை அதிக ஊராட்சிகளில் கொண்டு வர உள்ளது.

இது போன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கண்ணாடி இழை கேபிள் மூலம் மத்திய அரசின் தமிழ் இணையதிட்டத்தில் இணைந்து இணைய தள சேவையை மக்களுக்கு வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News