திருவெண்ணைநல்லூர் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் கொள்ளை
திருவெண்ணைநல்லூர்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாயநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் விவசாயி.
இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் காந்தலவாடியில் உள்ள உறவினர் இறப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கஜேந்திரனின் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வீடு திறந்து கிடப்பதை பார்த்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கஜேந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு திறந்து கிடப்பது கண்டு பதறிபோனார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசில் கஜேந்திரன் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.