செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்தலாம்- மதுரை ஐகோர்ட்டு கருத்து

Published On 2020-01-10 10:02 GMT   |   Update On 2020-01-10 10:02 GMT
கடந்த ஆண்டை போல் அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நடத்தலாம் என மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

மதுரை:

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் உட்பட பலர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் கமிட்டிக்கு தலைமை வகிப்பவர், கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு குழுவின் தலைவராக இருந்து வருகிறார். கணக்கு வழக்குகளை முறையாக சமர்ப்பிப்பதில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமல் தனது குடும்ப விழாபோல் தன்னிச்சையாக செயல் பட்டு முடிவுகளை எடுத்து வருகிறார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவில் பங்கெடுக்க ஆதிதிராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டினை அனைவரும் சேர்ந்து ஒற்றுமையுடன் நடத்தும் நிலையும், ஆர்வமும், பங்கெடுப்பும் குறையும். எனவே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கிராம மக்களின் அனைத்து சமூக பங்கெடுப்புடன் கூடிய விழாக்குழுவை அமைத்து ஜல்லிகட்டினை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழுவை மாற்றியமைக்கவும் உத்தரவிட வேண்டும்“ என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஜல்லிக்கட்டு விழா குழு வினை அமைத்து ஜல்லிக் கட்டை நடத்த உத்தர விட வேண்டும் என வழக்கறிஞர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் கடந்த ஆண்டைப் போல ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் நீதிமன்றமே குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தலாம் என கருத்து தெரிவித்தனர். இதுதொடர்பாக விரிவான உத்தரவு பிறப்பிப்பதற்காக நீதிபதிகள் வழக்கை வருகிற 13-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Tags:    

Similar News