என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "High Court Madurai Bench"
- கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.
- எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும்.
புதுடெல்லி:
தமிழகத்தில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
அதன்படி தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இதனைத் தொடர்ந்து 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் முதன்மையானதாக கருதப்படும் 'எய்ம்ஸ்' மருத்துவமனை தமிழகத்துக்கு வருவதை அறிந்த தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால், இடம் தேர்வு செய்வது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை தாமதம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்து வருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில், கடந்த 2019-ல் அடிக்கல் நாட்டிய பிறகும் கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.கவுல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முடியாது என்றும், இந்த வழக்கில் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்க இயலாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மேலும் எய்ம்ஸ் விவகாரத்தை மனுதாரர் நிர்வாக ரீதியில்தான் அணுகவேண்டும் என்றும் கூறி கே.கே. ரமேஷ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
- 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர்
- விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
மதுரை:
நெல்லை மாவட்டதை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2018-ம் ஆண்டில் ராணுவ வீரர்கள் தேர்வில் பங்கேற்றோம். உடல் தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றோம். இந்த தேர்வின் முடிவில் ராணுவ வீரர்கள் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியலில் எங்கள் பெயர் இடம் பெறவில்லை.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தபோது, 22 பணியிடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள் தேர்வாகியுள்ளனர் என்றார். ஆனால் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பாணையில் இந்த பதவிக்கு எத்தனை பேர் தேவை, எத்தனை பேரை தேர்வு செய்ய இருக்கிறார்கள் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
இது சட்ட விரோதமானதாகும். எனவே இந்த அறிவிப்பாணையை ரத்து செய்துவிட்டு, விதிகளை பின்பற்றி முறையாக அறிவிப்பாணை வெளியிட்டு ராணுவ வீரர்களை தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர், முதன்மை ராணுவ அதிகாரி உள்ளிட்டோர் ஏற்கனவே தங்களது தரப்பு பதிலை ஐகோர்ட்டில் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர்களின் கோரிக்கை ஏற்புடையதல்ல. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.
- முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது.
மதுரை:
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை மாநகராட்சியின் தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளேன். இந்நிலையில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி நடைபெற்று உள்ளது. என் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையின்போது மட்டும் ஆஜராகி விட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரு சென்றிருந்தேன்.
இதற்கிடையே கடந்த செப்டம்பர் 4-ந்தேதி பெங்களூரு பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் என்னை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் தன்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து பல லட்சம் ரூபாய் செலவழித்து தற்போது உயிர் பிழைத்துள்ளேன்.
பல தரப்பிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கி உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வி.கே.குருசாமி மீது பலமுறை கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அவர் மீது வழக்குகள் இருந்தாலும் அவரது உயிருக்கு உடனடியாக பாதுகாப்பு தேவைப்படுகிறது என வாதிட்டனர்.
இதனை பதிவு செய்த நீதிபதி, கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியாது. மனுதாரர் மீது தற்போது உள்ள வழக்குகளின் நிலை என்ன? மனு குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர், மதுரை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 28-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- கடந்த 2012-ம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார்.
- மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில், நித்தியானந்தா சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கடந்த 2012-ம் ஆண்டு என்னை மதுரை ஆதீனம் மடத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் 2019-ம் ஆண்டு இந்த அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றார். இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மதுரை ஆதீன மடத்தின் 292-வது மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நலக்குறைவால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி காலமானார். முறைப்படி அவருக்கு பின் நான் தான் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்க வேண்டும்.
ஆனால், தற்போது எந்தவித ஒப்பந்தமோ, உயிலோ இல்லாமல், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் மறைவுக்கு பிறகு, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் மதுரை மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ள மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் அருணகிரி நாதருக்கு பதிலாக, 293-வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியரை எதிர் மனுதாரர் ஆக சேர்க்கப்பட்டு உள்ளார். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது ஏற்புடையதல்ல. மாவட்ட கோர்ட்டு நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து, தற்போதைய மதுரை ஆதினம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும்.
- வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம்.
மதுரை:
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி மலைக்கு மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும். நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலைத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அனுமதி மறுத்து விட்டனர்.
எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட கோரிய மனுவில் கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பு வக்கீல் ஆஜராகி, மலைக்கோவிலுக்கு செல்ல மூன்று பாதைகள் உள்ளன. மூன்று பாதைகளிலும் 3 போலீஸ் டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதி, உரிய அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல எவ்வாறு உரிமை கோர முடியும். ஒரு பிரிவினருக்கு கோவிலில் தங்க அனுமதி கொடுத்தால் மற்றவர்களும் நீதிமன்றத்தை அணுகுவார்கள். இதை அனுமதிக்க முடியாது.
வேண்டுமென்றால் மனுதாரர் குறிப்பிட்ட நாளில் காலை 1 மணி நேரம் மாலை 1 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதி வழங்கலாம். அந்த முடிவை வனத்துறை தான் எடுக்க வேண்டும். இந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
- சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
- புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி உள்பட சிலர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2020-ம் ஆண்டில் தனது கணவர் மீது வரதட்சணை கொடுமை புகார் அளித்தார். அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத எங்களையும் சேர்த்து உள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் பேரில் போலீசார் ஆண்டிப்பட்டி கோர்ட்டில் இறுதி அறிக்கையையும் தாக்கல் செய்துவிட்டனர். அவர்களின் குடும்ப விவகாரத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. போலீசார் முறையாக விசாரிக்காமல் எங்கள் மீதான வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர். எங்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு மிகத் தெளிவாக உள்ளது. அதாவது, கணவரின் ரத்த உறவுகள் மீது மட்டுமே இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் சட்டத்திற்கு மாறாக காவல்துறையினர் மனுதாரர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல என வாதாடினார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த பெண்ணின் புகாரில், கணவரின் இரண்டாவது மனைவியின் உறவினர்களான மனுதாரர்களையும் சேர்த்துள்ளார்.
வரதட்சணை சட்டப்படி பெண்ணின் கணவர் மற்றும் அவரது ரத்த உறவு மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இங்கு சம்பந்தமே இல்லாத சிலர் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார் அளித்திருப்பது ஏற்புடையதல்ல.
அந்த புகாரை முறையாக போலீசார் விசாரிக்காமல் வழக்குப்பதிவு செய்து, இறுதி அறிக்கையையும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர். எனவே மனுதாரர்கள் மீதான வழக்கின் இறுதி அறிக்கை ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.
- எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன்.
- சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள்.
மதுரை:
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா தேவி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
நான் அம்பாசமுத்திரம் நகராட்சி 8-வது வார்டு சுயேச்சை கவுன்சிலராக உள்ளேன். எங்கள் பகுதி பொதுமக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். எங்கள் வார்டு மக்களின் குறைகளையும், அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்ந்து நகராட்சியிடம் முறையிட்டு வருகிறேன்.
ஆனால் இங்கு உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை. சம்பந்தமே இல்லாமல் பல்வேறு திட்டங்களை எங்கள் வார்டில் செயல்படுத்துகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதில்லை.
இதை சுட்டிக்காட்டி தொடர்ந்து வார்டு மக்களின் நலனுக்காக போராடுகிறேன். எனது கோரிக்கைகள் இதுவரை ஏற்கப்படவில்லை. எனவே எங்கள் வார்டு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அறவழி உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளித்தேன். அவர்கள் அனுமதி மறுத்துள்ளனர். நான் திட்டமிட்டபடி நாளை (6-ந்தேதி) போராட்டம் நடத்த அனுமதிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் மனுதாரர் தனது போராட்டத்தை நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
- குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
- விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர்
மதுரை:
கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன்பு மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உரிமம் பெற்றவர்கள் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி , மோசடி செய்ததாக புகார் எழுந்த நிலையில் கிரானைட் குவாரிகள் மூடப்பட்டு உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் விசாரணை குழு விசாரணை நடத்திய பின்னர் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக 2013-ம் ஆண்டு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.
இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த கிரானைட் குவாரி முறைகேடு சம்பந்தமான வழக்குகள் மேலூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்நிலையில் கிரானைட் குவாரிகள் தொடர்பான வழக்குகள் கனிம வளக்குற்றங்களை விசாரிக்கும் மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் நிறுவனமான ஒலம்பஸ் கிரானைட் நிறுவனம் மீதும் மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து அரசுக்கு ரூ.257 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. எனவே 2013-ம் ஆண்டில் ஒலம்பஸ் குவாரி நிறுவனத்தின் பங்குதாரர் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது கீழவளவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது காவல்துறையினர் 5191 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 27-ம் தேதி மேலூர் நீதிமன்றத்தில் துரை தயாநிதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகைகளின் நகலை பெற்றுக்கொண்ட பின்பு இந்த வழக்கு மதுரை மாவட்ட கனிமவள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு செப். 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கிரானைட் முறைகேடு வழக்கிற்காக நீதிபதி சிவகடாட்ஷம் முன்பாக துரைதயாநிதி இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற நவம்பர் 6-ந்தேதி வழக்கை ஒத்திவைத்தார்.
விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே வந்த துரைதயாநிதியிடம் நிருபர்கள், அரசியலுக்கு வருவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கோர்ட்டுக்கு வந்துள்ளேன் என பதில் அளித்தவாறு காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
- ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
- சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.
இந்த வழக்கில் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட 9 போலீசாரை சி.பி.ஐ. கைது செய்து மதுரை சிறையில் அடைத்தது. இந்த வழக்கின் விசாரணை மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், "சாத்தான்குளம் வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். உடல் நலக்குறைவு காரணமாக சிரமப்பட்டு வருகிறேன். எனவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும், என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று மீண்டும் நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகு கணேசுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ரகு கணேசின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே 4 முறை அவரது ஜாமீன் மனுக்கள் ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் வழக்கில் ஜாமீன்கோரி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. சாத்தான்குளம் சம்பவத்தில் இறந்த ஜெயராஜின் மனைவி, செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்ககூடாது என இடையீட்டு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
மேலும் சி.பி.ஐ தரப்பு மற்றும் ஸ்ரீதர் தரப்பில் மூத்த வக்கீல்கள் ஆஜராக கால அவகாசம் கோரப்பட்டது. அதனை தொடர்ந்து இறுதி விசாரணைக்காக இந்த வழக்கை வருகிற 13-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.