செய்திகள்
தற்கொலை

கோவையில் காதலனுடன் தகராறு- ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2020-01-01 09:49 GMT   |   Update On 2020-01-01 09:49 GMT
கோவையில் காதலனுடன் ஏற்பட்ட தகராறில் ரெயில் முன் பாய்ந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கொண்டசாமி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கவுசிகாதேவி(வயது22). கல்லூரி மாணவி. இவருக்கு அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வரும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. காதலர்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று மனம் விட்டு பேசி தங்கள் காதலை வளர்த்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் சந்தித்து பேசாமல் இருந்தனர்.

இந்த நிலையில் அந்த பஸ் டிரைவர், கவுசிகாதேவிக்கு போன் செய்து உன்னுடன் பேச வேண்டும் வா என்றார். இதையடுத்து கவுசிகா தேவி நேற்று மாலை அந்த வாலிபரை சந்திப்பதற்காக சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவு அருகே இருவரும் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்கள் 2 பேருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் வாக்குவாதம் முற்றவே மனம் உடைந்த கவுசிகா தேவி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்திற்கு சென்றார். பின்னர் அந்த வழியாக இரவு 8 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு வந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில் தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே கவுசிகாதேவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவுசிகாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News