செய்திகள்
திருமுருகன் காந்தி

கோத்தபய ராஜபக்சேவின் வெற்றி தமிழர்களுக்கு பேராபத்து - திருமுருகன் காந்தி

Published On 2019-11-21 10:18 GMT   |   Update On 2019-11-21 10:18 GMT
இலங்கையில் மகிந்த ராஜபக்சேவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது தமிழர்களுக்கு பேராபத்தை விளைவிக்கும் என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர், நவ.21-

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

இலங்கையில் தமிழினத்தை படுகொலை செய்து அழித்த மகிந்த ராஜபக்சேவும், அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். இது தமிழர்களுக்கு மேலும் பேராபத்தை விளைவிக்கும். அதிபர் தேர்தலில் நிற்பதற்கு முன்பு கோத்தபய ராஜபக்சே இந்திய பிரதமரை சந்தித்ததை யாரும் மறக்க மாட்டார்கள். சர்வதேச போர் குற்றவாளிகளாக இருக்கக்கூடிய ராஜபக்சே சகோதரர்கள் எப்படி அதிகாரத்துக்கு வந்தனர் என்பதை நாம் கவனிக்க வேண்டி உள்ளது.

சர்வதேசத்தின் உதவி இல்லாமல் இவர்கள் அதிகாரத்துக்கு வந்திருக்க முடியாது. இந்த நிலைமை மிக மோசமானது. தமிழீழ தமிழர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் ஆபத்தானதாகவே நாங்கள் பார்க்கிறோம். ராஜபக்சேவின் கடந்த கால ஆட்சியில் தமிழக மீனவர்கள் கடுமையாக தாக்கபட்டனர். பலர் கொல்லப்பட்டனர். இதை மறந்து விட கூடாது. தமிழக மீனவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியும், சிறைப்பட்டும் கிடந்தனர்.

மத்திய அரசின் வெளியுறவு கொள்கை எப்படி தமிழர்களை பாதுகாக்க போகிறது என்பதுதான் கவலையாக இருக்கிறது. இதை தமிழர்கள் துணிந்து ஒற்றுமையுடனும், ஜனநாயக ரீதியிலும எதிர்கொள்ள வேண்டும். கோத்தய ராஜபக்சே சீன, அமெரிக்காவுடன் நெருக்கம் காட்ட கூடியவராக இருக்கிறார். சீன, அமெரிக்க நாடுகளின் ராணுவத்தை இந்த பிராந்தியத்துக்குள் கொண்டு வரக்கூடிய நபராக இருக்கிறார்.

எனவே இந்திய பெருங்கடல் ராணுவமயமான ஒரு கேந்திரமாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இது தமிழர்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை பயக்காது. கோத்தபய ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்று திரட்டி எதிர்ப்பை பதிவு செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். * * * திருமுருகன் காந்தி

Tags:    

Similar News