செய்திகள்
தற்கொலை செய்து கொண்ட புவனேஸ்வரி

திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை - கணவரின் வீட்டு வாசலில் உடலை புதைக்க முயன்ற உறவினர்கள்

Published On 2019-11-21 05:59 GMT   |   Update On 2019-11-21 05:59 GMT
பேராவூரணி அருகே திருமணமான 4 மாதத்தில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணி:

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது30). புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் மகள் புவனேஸ்வரி(24). இருவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கருத்து வேறுபாடு காரணமாக நவீன்குமார்,புவனேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த புவனேஸ்வரி கடந்த 18-ந்தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

அவரை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி புவனேஸ்வரி பரிதாபமாக இறந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் நேற்று நவீன்குமாரின் வீட்டு வாசலில் புவனேஸ்வரியின் உடலை புதைக்க முடிவு செய்தனர். அதன்படி வீடு முன்பு திரண்ட உறவினர்கள் அங்கு எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்களை புவனேஸ்வரியின் உறவினர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று புவனேஸ்வரியின் உறவினர்களை சமாதானம் செய்தனர். இதன் காரணமாக வீட்டு முன்பு உடலை புதைக்கும் முடிவை உறவினர்கள் கைவிட்டனர்.

புவனேஸ்வரி தற்கொலை தொடர்பாக பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆவதால் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. தனி விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News