செய்திகள்
கைதான கணவன் - மனைவி

திருவள்ளூரில் கணவன்-மனைவி உள்பட 4 போலி டாக்டர்கள் கைது

Published On 2019-11-06 06:01 GMT   |   Update On 2019-11-06 06:01 GMT
திருவள்ளூர் மாவட்டத்தில் கணவன், மனைவி உள்பட 4 போலி டாக்டர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கிராந்தி. இவர்கள் வீட்டின் முன்புறம் மருந்து கடை நடத்தி வந்தனர்.

மேலும் வீட்டில் இவர்கள் இருவரும் ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக திருவள்ளூர் மாவட்ட மருத்துவ அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மருந்து கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வீட்டில் இருந்த அறையில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான ஊசிகள், மருந்துகள் கிடைத்தன.

மேலும் முரளியும், அவரது மனைவி கிராந்தியும் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை மருத்துவ அலுவலர் காவலன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவா வழக்குப்பதிவு செய்து போலி மருத்துவர்களான முரளி, கிராந்தி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

இதேபோல் மாவட்ட சுகாதாரத்துறை காசநோய் பிரிவு துணை இயக்குனர் லட்சுமி முருகன் தலைமையிலான குழுவினர் திருத்தணியில் உள்ள அமிர்தாபுரம் திருவள்ளுவர் தெருவுக்கு சென்று அங்குள்ள ஒரு வீட்டில் ஆய்வு நடத்தினர்.

அப்போது அந்த வீட்டில் வசித்து வந்த வேளாங்கண்ணி என்பவர் லேப் டெக்னிசியன் படித்து விட்டு அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் வேளாங்கண்ணியை திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் வேளாங்கண்ணியை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன் தலைமையிலான குழுவினர் பழவேற்காடு கோட்டை தெருவில் உள்ள தனியார் கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

அங்கு பி.காம். பட்டதாரியான சென்னை எர்ணாவூர் பாரதி நகரை சேர்ந்த பழனிசாமி என்பவர் மருத்துவம் செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுகாதார நல குழுவினர் போலி டாக்டரான பழனிசாமியை திருப்பாலைவனம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பழனிசாமியை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags:    

Similar News