செய்திகள்
விபத்தில் பலியான சித்ரா-சங்கர்.

கும்பகோணம் அருகே விபத்து: கணவன்- மனைவி பலி

Published On 2019-10-24 04:42 GMT   |   Update On 2019-10-24 04:42 GMT
கும்பகோணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர்(வயது 47). இவர், கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா(40).

இந்த நிலையில் நேற்று மதியம் சங்கர், அவரது மனைவி சித்ரா மற்றும் உறவுக்கார பெண் சசிகலா (30) ஆகியோருடன் ஆடுதுறையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அங்கு பணம் வாங்கிக்கொண்ட பிறகு அங்கிருந்து திருவிடைமருதூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கோவிந்தபுரம் பகுதியில் அவர்கள் வந்தபோது எதிரில் சேலத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த அரசு பஸ், எதிர்பாராதவிதமாக சங்கர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சங்கரின் கால் துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சங்கரின் மனைவி சித்ரா மற்றும் உறவினர் சசிகலா ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் சித்ராவை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சித்ரா பரிதாபமாக இறந்தார். சசிகலாவுக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் போலீசார், சங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சங்கர்-சித்ரா தம்பதியினருக்கு அரவிந்த், மணிகண்டன் ஆகிய 2 மகன்களும், அகிலா என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News