திருச்சூர் அருகே மின்வாரிய ஊழியர் குத்திக்கொலை - நண்பர் கைது
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் அங்கமாலி அருகே உள்ள கம்பனூர் பகுதியை சேர்ந்தவர் ஜோயன்(வயது 21). அதே பகுதியை சேர்ந்த சாஜூ(51). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கேரள மின்வாரியத்தில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்கள் இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்றும் இவர்கள் இருவருக்கும் இடையே இது தொடர்பாக வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சாஜூ தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜோயனின் மார்பில் பலமுறை குத்தினார். இதையடுத்து சாஜூ அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
காயம் அடைந்த ஜோயன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சாஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.